வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED : மே 30, 2026 11:04 PM

புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவில் மகோற்சவ தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், 40ம் ஆண்டு மகோற்சவ விழா கடந்த மாதம் 19-ம் தேதி துர்க்காம்பாள் பூஜையுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா நேற்று காலை 7:30 மணி முதல் 8:30 மணிக்குள் கோலாகலமாக நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி எழுந்தருள, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. இந்நிகழ்வில் பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இன்று 31ம் தேதி காலை 7 மணிக்கு நடராஜர் தேரி மிதித்தல், தீர்த்தவாரி, சந்திரசேகரர் வெள்ளி பல்லக்கில் வீதியுலா, அபிேஷகம் நடக்கிறது. திருவிழா வரும் ஜூன் 6ம் தேதி காலை 9 மணிக்கு உற்சவ சாந்தி மற்றும் சங்காபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது.
