ஓநாய் தாக்கி சிறுமியர் இருவர் பலி, 9 பேர் காயம்: உ.பி.,யில் கிராம மக்கள் அச்சம்!
ஓநாய் தாக்கி சிறுமியர் இருவர் பலி, 9 பேர் காயம்: உ.பி.,யில் கிராம மக்கள் அச்சம்!
ADDED : செப் 18, 2025 05:53 PM

பஹ்ரைச்: உத்தரபிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓநாய் தாக்குதலால் சிறுமியர் இருவர் பலியாகினர். 9 பேர் காயமடைந்ததுள்ளனர். இந்த சம்பவங்கள் காரணமாக கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின பஹ்ரைச் மாவட்டத்தின் கைசர்கஞ்ச் மற்றும் மஹ்சி தாலுகாக்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை ஓநாய் தாக்கும் சம்பவங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த 20 நாட்களில் மொத்தம் 11 ஓநாய் தாக்குதல் சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளன. இதில், 2 சம்பவங்களில் குழந்தைகள் இறந்து விட்டனர். செப்டம்பர் 9ம் தேதி, ஜோதி என்ற நான்கு வயது சிறுமியை ஓநாய் ஒன்று துாக்கிச்சென்ற நிலையில், மறுநாள் அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. செப்டம்பர் 11ம் தேதி, மூன்று மாதக் குழந்தை சந்தியா தனது தாயின் மடியிலிருந்தபோது, ஓநாய் துாக்கிச்சென்றது. மறுநாள் அந்த குழந்தையின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 9 சம்பவங்களில் தலா ஒருவர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தேவிபதன் பிரிவின் வனப்பாதுகாவலர் சிம்ரன் கூறியதாவது:
ஓநாய் தாக்குதலுக்குட்பட்ட பகுதிகளில், போலீஸ், வன அதிகாரிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் விலங்குகளைக் கண்காணிக்கவும் பிடிக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இங்கு ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வெப்ப ட்ரோன்கள், இரவிலும் தெளிவாக பார்க்கும் வகையிலான கேமராக்களுடன் இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், கிராமவாசிகள் குண்டாந்தடிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிரோன் மூலம் கண்காணித்த வனத்துறை இரண்டு ஓநாய்கள் சுற்றி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் அவற்றைப் பிடிக்கவில்லை.
கடந்தாண்டும் இதே பகுதியில் ஒரு ஓநாய் கூட்டம் 9 பேரைக் கொன்று விட்டது. மேலும் பலரை காயப்படுத்தியது. இதைத் தொடர்ந்து 'ஆபரேஷன் ஓநாய்' என்ற நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது. தற்போது மீண்டும் அதேபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வனப்பாதுகாவலர் சிம்ரன் கூறினார்.