ADDED : மே 10, 2026 02:30 AM

மனித நாகரிக துவக்கத்தின் பாறை, குகை ஓவியங்கள் முதல் இன்றைய நவீன டிஜிட்டல் கலை வரை நீண்ட நெடிய பரிணாம வளர்ச்சியை கொண்டது ஓவியக்கலை. இவை கலாசாரம், பண்பாடு, சமூகக் கருத்துக்களை பதிவு செய்யும் ஆவணம். அஜந்தா, எல்லோரா வரிசையில் இன்று கியூபிசம், இம்ப்ரெஷனிசம் என மார்டன் பெயர்களில் ஓவியங்கள் நம்மை மிரட்சி அடைய வைக்கிறது.
படைப்பின் மீதான ரசனை, படைப்பாளர்களையும் அங்கீகரிக்க தவறுவதில்லை. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த ஓவியர் பிரியதர்ஷினியிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.
அவர் பகிர்ந்தது: 8ம் வகுப்பு படித்த போது சக தோழி பென்சிலில் வரைந்த ஓவியத்தை பார்த்து ஈர்ப்பு உண்டானது. போட்டிக்காக சில ஓவியங்களை வரைந்து பார்த்தேன். அப்படி உண்டானது ஓவியக்காதல். வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் கிடைத்த வாய்ப்புகள், போட்டிகளில் பரிசுகள் பெற்றேன். எலக்ட்ரானிக்ஸ் இன்ஜியனியரிங் முடித்திருந்தாலும் கம்பெனியில் வேலை செய்ய விருப்பம் இல்லை. என் மன விருப்பப்படி ஓவியத்திறனை மெருகேற்ற ஓராண்டு பயிற்சி பெற்றேன்.
எனது விருப்பம் என்றில்லாமல் ஓவியத்தின் எல்லா வகைகளையும் கற்க ஆசை. அதற்காக விதவிதமான தீம்களில் வரைந்தேன். பறவைகள், விலங்குகள், இயற்கை ஓவியங்கள் தீட்டுவதும், வரைவதும் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். வீட்டுச்சுவரில் ஏகமாக வரைந்திருக்கும் இயற்கை பெயிண்டிங் தான் அதற்கு சாட்சி.
நிஜத்தன்மை ஓவியங்கள் வரைவது திரில்லிங் அனுபவம் தரும். பேனா, பென்சில், வாட்டர் கலரிங், ஆயில், பெயிண்டிங், போர்ட்ரைட், ேஷடிங், கிளாஸ் பெயிண்டிங் எல்லா வகையிலும் வரைந்திருக்கிறேன். தஞ்சாவூர் ஓவியங்களை இன்னும் முயற்சித்து பார்க்கவில்லை.
ஓவியராக எனது படைப்புகளையும் உலக அளவில் காட்சிப்படுத்த வேண்டும் என ஆசை உள்ளது. கலை, ஓவியங்கள், சிற்பங்கள் சம்பந்தமாக ஊர் சுற்ற கிடைத்த வாய்ப்புகள் அலாதியான அனுபவங்களை தந்தது. ஆர்ட் கேலரிகளில், புகழ் பெற்ற கலைஞர்களின் ஓவியங்கள் மட்டுமல்லாது வளர் இளம்கலைஞர்களையும் அங்கீகரிக்கும் அம்சம் பாராட்டத்தக்கது.
கலைக்கும், கலைஞனுக்கும் தாகம் இருக்க வேண்டும். அப்போது தான் நிறைய புது படைப்புகள் வெளிவரும். எனது தேவைக்கும், செலவுக்கும் கமர்சியலாக ஓவியம் வரைந்து கொடுக்கிறேன்.
உழைப்புக்கு கிடைக்கும் பணமும், பாராட்டும் தான் இதுவரை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதிகளாக கருதுகிறேன். எனது முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் குடும்பத்தினருக்கு இந்த வாய்ப்பின் மூலம் நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஓவியம் வெறும் காட்சிப்பொருள் மட்டுமல்ல; அது காலத்தின் கண்ணாடியாகவும், மனித உணர்வுகளின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. எனவே, இளம் கலைஞர்கள் அவர்களின் முயற்சியை தொடர வேண்டும். உங்களின் முயற்சி நிச்சயம் உங்களுக்கு வெற்றி திலகமிடும்.
