UPDATED : மே 10, 2026 09:23 AM
ADDED : மே 09, 2026 07:12 PM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதை தொகுப்பு குறித்து இலக்கிய சொற்பொழிவாளர் மகேஸ்வரி சற்குரு பகிர்வு. தமிழின் மூத்த படைப்பாளிகளில் முன்னோடி கு.அழகிரிசாமி. 1940 முதல் 1970 வரை நாவல், சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு எழுதி இருந்தாலும், இவரது சிறுகதைகள் மீது வாசகர்களுக்கு அதிக ஈர்ப்பு இருந்தது.
ரஷ்ய எழுத்தாளர்கள் ஆன்டன் செகாவ், கார்க்கி ஆகியோருடன் விமர்சகர்கள் ஒப்பிடும் அளவுக்கு, இவரது கதைகள் தரமானவை. புதுமைப்பித்தன், துாரன், கி.ரா., சுந்தர ராமசாமி ஆகியோருக்கு அழகிரிசாமியின் படைப்புகள் மேல் தனி மதிப்பு உண்டு.
அழகிரிசாமியின், 105 சிறுகதைகளை, காலச்சுவடு பதிப்பகத்துக்காக பழ.அதியமான் ஒரே நுாலாக தொகுத்து இருக்கிறார். தனி கதைகளை விட, தொகுப்பாக வாசிப்பது படைப்பாளியை முழுமையாக புரிந்துகொள்ள உதவும்.
இந்த நுாலில் உள்ள கதைகளில் வாத்தியாரம்மாள், தெய்வம் பிறந்தது, வனஜம், விதவை, முருங்கை மரமோகினி, விட்டகுறை, தர்மராஜ்ஜியம், இரு சகோதரர்கள், ஜாதி ஆச்சாரம், திருவொற்றியூர் வல்லி, பங்கஜத்தின் தற்கொலை, முகக்களை ஆகியன எனக்கு பிடித்தவை.
'இரு சகோதரர்கள்' மிக சிறப்பான கதையாகும். திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த ஒரு குடும்பம் என்ன மாதிரியான சமூக சிக்கல்களை சந்திக்கிறது, கூட்டு குடும்பமாக வாழும் அண்ணன், தம்பி, அண்ணி இடையே சிக்கலாகும் உறவுகளால் அந்த குடும்பம் எப்படி சீர்குலைகிறது என்பதை அற்புதமாக சித்தரித்து இருக்கிறார்.
மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு மாற்றலாகி வரும் ஒரு டீச்சரின் கதைதான் 'வாத்தியாரம்மா'. வேறு பள்ளிக்கு மாற்றலாகி போக அதிகாரிகளோடு போராடுகிறார். வனஜம் என்ற கதை சிறுவயது காதலை எதார்த்தமாக சித்தரிக்கிறது.
'விதவை' கதை 70 ஆண்டுகளுக்கு முன் சாதி படி நிலைகள் எப்படி இருந்தன என்பதை நுட்மாக விவரிக்கிறது.
இப்படி ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் சிறப்பாக உள்ளது. வாழும் மனிதர்களும், வாழ்ந்து மறைந்த மனிதர்களும் அழகிரிசாமியின் கதைகளில் பாத்திரங்களாக வாழ்கின்றனர்.
