ADDED : மே 23, 2026 08:41 PM

‘‘வயசாவது... ஒன்னாவது... மனசுல தெம்பு இருந்தா மைதானத்துல நாமதான் கெத்து!’ நிரூபித்துக் காட்டியிருக்கிறது திருப்பூரைச் சேர்ந்த ஒரு மூத்தோர் மூவர் படை. மயிலாடுதுறையில் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டியில், பதக்கங்களை வாரிக் குவித்து அசத்தியுள்ளனர்.இதில், 85 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியையான கோவிந்தம்மாள், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் நடைபோட்டி என தான் களமிறங்கிய, 3 பிரிவுகளிலும், 3 தங்கப்பதக்கம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.மேலும், 80 வயதான அம்மு குட்டி குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் தலா ஒரு தங்கம் வீதம், 3 தங்கம் தட்டிச் சென்றார். 70 வயதான சரஸ்வதி நடைப்போட்டி, ஈட்டி எறிதல், குண்டு எறிதல் பிரவில் வெண்கலம் வென்றிருக்கிறார்.
–––
முடங்கக் கூடாது...கோவிந்தம்மாள் கூறியதாவது:நான் ஸ்கூல்ல படிக்கும்போதே ரன்னிங், த்ரோபால் எல்லாம் நல்லா விளையாடுவேன்; அப்போது டீம் கேப்டனா கூட இருந்திருக்கேன். பணி ஓய்வுக்கு அப்புறம் சண்டிகர், சென்னை, புதுவைன்னு நிறைய இடங்களுக்கு தேசிய அளவிலான போட்டியிட பங்கெடுத்திருக்கேன். இப்போ, 85 வயசாகுது. இந்த வயசுலயும் வாக்கிங், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டிகள்ல கலந்துக்கிறேன். தினமும் தவறாம வாக்கிங் போயிடுவேன். விளையாட்டுங்கிறது வெறும் மெடலுக்கான போட்டி மட்டுமில்ல; அது ஒரு உடற்பயிற்சி. இன்னைக்கு இருக்குற இளைஞர்கள் மொபைல் போனை தாண்டி விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் ஆர்வம் காட்டணும். அது உடம்பை ஆரோக்கியமா வச்சுக்க உதவும். வயசாயிடுச்சுன்னு முடங்கி உட்காரக் கூடாது. தொடர்ந்து பயிற்சி செஞ்சா ஆரோக்கியம் தானா தேடி வரும். –––ஒத்துழைப்பு வேண்டும்!
சுமதி விஜயலட்சுமி, செயலாளர்,
திருப்பூர் மாவட்ட வெட்ரன்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்
எங்க அசோசியேஷன், மூத்த வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதுடன், பல்வேறு போட்டிகளை தொடர்ந்து ஒருங்கிணைச்சுட்டு வர்றோம். 40, 50 வயதுக்கு மேல நிறைய பேரு விளையாட்டல ஆர்வம் காட்றாங்க. திருப்பூர்ல கூட போன வருஷம் போட்டி நடத்தினோம். அப்போ திருப்பூர்ல இருக்க பல நிறுவனங்களை நேர்ல போய் அணுகி, தொழிலாளர்களை போட்டிகளுக்கு அனுப்ப கேட்டோம். ஆனா, நிறுவனங்கள் ஆர்வம் காட்டல. தினமும் ஒரே மாதிரியான வேலைச் சுமையில இருக்குற தொழிலாளர்களுக்கு, வருஷத்துக்கு ஒரே ஒரு நாள் விடுப்பு கொடுத்து இந்த மாதிரி போட்டிகள்ல விளையாட அனுமதிச்சா, அவங்களுக்கு அது பெரிய ‘ரிலாக்ஸா’ மனசு புத்துணர்ச்சியாகி, கம்பெனி வேலைகளையும் இன்னும் சிறப்பா செய்வாங்க!–––
