UPDATED : மே 17, 2026 01:21 PM
ADDED : மே 17, 2026 06:59 AM

தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த ஆட்டுக்கால் - நான்கு
தக்காளி, சின்ன வெங்காயம் - பத்து
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்
மிளகு, சீரகப் பொடி - ஒரு ஸ்பூன்
மல்லித்துாள், மிளகாய்த்துாள் - அரை ஸ்பூன்
மஞ்சள்துாள்- அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் - கால் மூடி லவங்கம் - இரண்டு
கசகசா - ஒரு ஸ்பூன்
ஏலக்காய் - ஒன்று
சோம்பு, கல்பாசி - கால் ஸ்பூன்
பட்டை - ஒரு சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - நான்கு
கருவேப்பிலை கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
நன்கு சுத்தம் செய்த ஆட்டுக்கால், தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகு சீரகப் பொடி, மல்லித்துாள், மிளகாய்த்துாள், மஞ்சள் துாள், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மீடியம் தீயில் வைத்து 10 விசில் வரும் வரைவேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
கால் மூடி தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, ஒரு ஸ்பூன் சோம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் பிரஷர் முழுவதுமாக நீங்கியதும், அரைத்து வைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, குறைந்தளவு தீயில் கொதிக்க விடவும்.
ஒரு சின்ன துண்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், கல்பாசி, கால் ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து, நன்றாகப் பொரியும் வரை வதக்கவும். இந்தத் தாளிப்பை, கொதித்துக் கொண்டிருக்கும் பாயாவில் சேர்த்து, கொஞ்சமாக கொத்தமல்லி தழையைத் துாவி இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.
