சூடானில் துணை ராணுவப்படையினர் தாக்குதல்: அப்பாவி மக்கள் 43 பேர் பலி
சூடானில் துணை ராணுவப்படையினர் தாக்குதல்: அப்பாவி மக்கள் 43 பேர் பலி
ADDED : செப் 19, 2025 06:55 PM

கார்டூம்: சூடானில் துணை ராணுவப்படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் அப்பாவி மக்கள் 43 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2023ம் ஆண்டு ஏப்.15 முதல் இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த சண்டையில் அப்பாவி மக்கள் 43 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச அமைப்புகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி போயுள்ளது.
இந்நிலையில், எல் பஷர் என்ற நகரில் உள்ள மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது துணை ராணுவப்படையினர் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டனர்.
நிராயுத பாணியான அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கொடூரமான குற்றம் என மனித உரிமை அமைப்புகள், குற்றம் சாட்டியுள்ளன. இந்த தாக்குதலில் அந்த மசூதி நொறுங்கி கிடப்பது மற்றும் அதில் உடல்கள் சிக்கி கிடக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளன.