ஐநா சபையில் டிரம்ப் சென்ற எஸ்கலேட்டர் பழுது; கொந்தளித்தது வெள்ளை மாளிகை
ஐநா சபையில் டிரம்ப் சென்ற எஸ்கலேட்டர் பழுது; கொந்தளித்தது வெள்ளை மாளிகை
UPDATED : செப் 24, 2025 01:49 PM
ADDED : செப் 24, 2025 01:20 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் ஐநா சபையில் உரையாற்ற சென்ற போது எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) பழுதாகியது. இது குறித்து விசாரணை நடத்துமாறு வெள்ளை மாளிகை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோர் ஐ.நா., சபைக்கு உரை நிகழ்த்தச் சென்றபோது, எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) பழுதாகி நின்று விட்டது. பின்னர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் நடந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது.
ஐ.நா., மீது அதிருப்தி
அதுமட்டுமின்றி, ஐ.நா., சபையில் பேச ஆரம்பித்தபோது, அவர் முன் இருந்த 'டெலிபிராம்ப்ட்டர்' (உரையை பார்த்து வாசிக்க உதவும் கருவி) பழுதாகி விட்டது. பின்னர் கடும் கோபம் அடைந்த அதிபர் டிரம்ப், '' 7 போர்களை நிறுத்தினேன். ஒரு முறை கூட ஐ.நா., போன் செய்து பாராட்டவில்லை. அவர்கள் கொடுத்தவை எல்லாம், பாடாவதி எஸ்கலேட்டர், பழுதான டெலிபிராம்ப்ட்டர் மட்டுமே'' என்றார்.
விசாரணை நடத்தணும்
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறி உள்ளதாவது: இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு அப்பாவி தவறு அல்ல. 'இது பற்றி விசாரணை நடத்தி, ஐநாவில் யாரேனும் வேண்டுமென்றே எஸ்கலேட்டரை நிறுத்தி இருந்தால், அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.