ADDED : செப் 27, 2025 08:30 AM

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவுவை தோற்கடிக்க, எதிர் கோஷ்டியினர் திட்ட மிட்டதால், திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., பிரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இருந்தார். அவரது கட்டுப்பாட்டில் ராதாபுரம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி தொகுதிகள் இருந்தன.
ராதாபுரம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான, சபாநாயகர் அப்பாவுவை, வரும் சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க, அவரது எதிர் கோஷ்டியினர் உள்குத்து வேலையில் இறங்க திட்டமிட்டனர்.
இதை அறிந்த கட்சி தலைமை, கட்சியினரிடம் சமாதானம் ஏற்படுத்த, திருநெல்வேலி மாவட்டத்தை, கிழக்கு, மேற்கு என இரு மாவட்டங்களாக பிரித்துஉள்ளது.
தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்த, ஆலங்குளம் சட்டசபை தொகுதி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் இருந்த அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதி அடங்கிய மாவட்டமாக, திருநெல்வேலி மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம், நான்குநேரி சட்டசபை தொகுதிகள், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. மேற்கு மாவட்டத்திற்கு ஆவுடையப்பன், கிழக்கு மாவட்டத்திற்கு கிரகாம்பெல், பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று அறிவித்துள்ளார்.
- நமது நிருபர் -