இருப்பதோ 2; தேவையோ 4 ரயில் பாதைகள் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் எப்போது?
இருப்பதோ 2; தேவையோ 4 ரயில் பாதைகள் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் எப்போது?
ADDED : செப் 20, 2025 04:00 AM

தென் மாவட்டங்களுக்கு தேவை நான்கு ரயில் பாதைகள்; இருப்பதோ இரண்டு மட்டுமே. இதனால், கூடுதல் ரயில் சேவையை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் கனவு திட்டமான, சென்னை எழும்பூர் -- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி, 2021ல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டது.
தாமதம்
பின், மதுரை,- திருநெல்வேலி, நாகர்கோவில், -கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணியை, 2022ல் முடிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
அதன்பின், பணிகள் துவங்கி முழு வீச்சில் நடந்ததால், கடந்த ஆண்டு அக்டோபரில் பாதை தயாரானது. இருப்பினும், இந்த இரட்டை வழித்தடத்தில், கடந்த மார்ச்சில் தான் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. ஆனாலும், தேவை அதிகம் உள்ள தென்மாவட்ட வழித்தடங்களில், கூடுதல் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளன.
திட்டமிட வேண்டும்
இதுகுறித்து, தெற்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஸ்ரீ ராம் கூறியதாவது:
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு தற்போது இயக்கப்படும் விரைவு ரயில்கள் போதுமானதாக இல்லை. சென்னை - கன்னியாகுமரி இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை பாதை பணிகள் முடிந்து, தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். மேலும், பயணியர் தேவை கருதி, தென்மாவட்டங்களை இணைக்க, கூடுதல் ரயில் பாதைக்கும் திட்டமிட வேண்டும். இப்போது திட்டமிட்டால் தான், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பணிகளை முடிக்க முடியும்.
திருவனந்தபுரம், கன்னியாகுமரியில் இருந்து, கடலோரமாக சென்னையை இணைக்கும் புதிய ரயில் பாதைக்கு, 'சர்வே' முடித்து, பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்த ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, தமிழக எம்.பி.,க்கள் அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -