வருவாய் உபரி ஈட்டுவதில் பின்தங்கிய தமிழகம்: அன்புமணி
வருவாய் உபரி ஈட்டுவதில் பின்தங்கிய தமிழகம்: அன்புமணி
UPDATED : செப் 24, 2025 12:00 PM
ADDED : செப் 24, 2025 07:17 AM

சென்னை: வருவாய் உபரி ஈட்டுவதில் உ.பி.,யை விட, தமிழகம் பின்தங்கி விட்டதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: இந்தியாவில் உள்ள, 28 மாநிலங்களில், 16 மாநிலங்கள் வருவாய் உபரி ஈட்டியிருப்பதாக, சி.ஏ.ஜி., எனப்படும் இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலமாக பார்க்கப்பட்ட உத்தர பிரதேசம், வருவாய் உபரியில் முதலிடம் பிடித்துள்ளது. விடியல் ஆட்சி தரப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., நிதி நிர்வாகத்தில் தமிழகத்தை, 27வது இடத்திற்கு தள்ளியிருக்கிறது.
நிதி நிர்வாகம் குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் தி.மு.க.,வுக்கு இல்லை என்பதையே, இந்த ஆய்வு காட்டுகிறது. சி.ஏ.ஜி., அறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட, 11 மாநிலங்கள் வாங்கும் கடனில் பெரும் பகுதி, ஊதியம், மானியத்திற்கு செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தி.மு.க., அரசு கடன் வாங்கித் தான், அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை, 36,215 கோடி ரூபாய். இது, தி.மு.க., அரசின் பெரும் தோல்வி.
தமிழகத்தில் நடப்பாண்டில், 1,218 கோடி ரூபாய் வருவாய் உபரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வருவாய் பற்றாக்குறை, 52,781.17 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. அதேபோல் நிதிப் பற்றாக்குறையும் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. இதை சமாளிக்க, அரசு கடனை வாங்கிக் குவிக்கிறது. ஒரு காலத்தில், உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலையில் இருந்த தமிழகத்தை, உத்தர பிரதேசத்திடம் படுதோல்வி அடையும் நிலைக்கு ஆளாக்கியிருப்பது தான், தி.மு.க., ஆட்சியின் சாதனை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.