வால்பாறைக்கும் இனி இ பாஸ் கட்டாயம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
வால்பாறைக்கும் இனி இ பாஸ் கட்டாயம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 19, 2025 06:36 PM

சென்னை; ஊட்டி கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கும் இ பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மலை வாசஸ்தலங்களாக ஊட்டி, கொடைக்கானல் நகரங்களில் இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை, வாகன நெரிசல் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றை மையமாக வைத்து இவ்விரு நகரங்களுக்கும் இ பாஸ் முறை ஏப்.1, 2025 முதல் ஐகோர்ட் உத்தரவுப்படி நடைமுறையில் இருக்கிறது.
ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்று ஐகோர்ட் உத்தரவுபடி, சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகினற்ன.
இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதி அறிக்கை டிசம்பரில் தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த குழுவுக்கு தேவையான தகவல்கள், ஆலோசனைகள் வழங்கும் வகையில் தலைமை செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அக்.31ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
இதனிடையே, ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறை காரணமாக, வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். எனவே அங்கும் இபாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிமன்றம், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து நவ.1 முதல் இ பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று கூறி அடுத்தக்கட்ட விசாரணையை அக்.31ம் தேதிக்கு தள்ளி வைத்தது.