திமுகவினர் கள்ளச்சாராயம் விற்கின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுகவினர் கள்ளச்சாராயம் விற்கின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : செப் 16, 2025 05:39 PM

சென்னை: '' திமுக அமைச்சர்கள் நடத்தும் மதுபான ஆலைகள் மூலம் தமிழக அரசின் டாஸ்மாக்கிற்கு மதுபானம் விநியோகம் செய்யும் நிலையில், அக்கட்சி தொண்டர்கள் கொல்லைப்புறமாக கள்ளச்சாராயம் விற்று எண்ணற்ற உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலரும், இளைஞர் அணி நிர்வாகியுமான சுரேஷ்குமார் சமீபத்தில் கள்ளச்சாராயம் விற்றதாக பிடிபட்டார்.
திமுக அமைச்சர்கள் நடத்தும் மதுபான ஆலைகள் மூலம், அரசு நடத்தும் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் போது, அவர்களின் அடிமட்ட நிர்வாகிகள் கொல்லைப்புறமாக கள்ளச்சாராயம் விற்று எண்ணற்ற உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர்.
தமிழகம் மீண்டும் மீண்டும் துயரங்களையும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயிர் இழப்புகளை கண்ட போதிலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இருந்து திமுக சிறிதும் கற்றுக்கொள்ளவில்லை.மரூர் ராஜா முதல் கோவிந்த்ராஜ் என்ற கண்ணுக்குட்டிவரை இப்போது சுரேஷ்குமாரையும் பொதுவாக இணைக்கும் விஷயம், அவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். மேலும் ஒவ்வொருவரும் கள்ளச்சாராய கொடிய விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை திமுக 15 ஆண்டுகள் வெற்றிகரமாக பின்னுக்கு இழுத்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.