/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் அஞ்சல் அலுவலர் கைது
/
தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் அஞ்சல் அலுவலர் கைது
தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் அஞ்சல் அலுவலர் கைது
தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் அஞ்சல் அலுவலர் கைது
ADDED : செப் 25, 2025 12:00 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்காமல் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி 59, ஜி.தும்மலபட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக பணியாற்றி வந்தார்.
இந்த அலுவலகத்தில் சேமிப்புத்திட்ட கணக்குளில் பணம் கையாடல் நடப்பதாக கொடைக்கானல் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் பாண்டியராஜனுக்கு புகார் வந்தது.அதன்பேரில், ஆய்வு செய்ததில் செல்வ மகள் சேமிப்புத்திட்ட கணக்குளில் டெப்பாசிட்தாரர்களிடம் பணம் வாங்கி புத்தகத்தில் வரவு வைத்துவிட்டு அதற்குரிய தொகையை அஞ்சல் அலுவலகத்தில் வரவு வைக்காமல் கையாடல் செய்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக நடந்த துறைரீதியான விசாரணையில் ரூ.25 ஆயிரம் மட்டுமே செலவுக்காக எடுத்தேன்.
அதை திரும்ப ஒப்படைத்துவிடுகிறேன் என முனியாண்டி கூறினார். தொடர்ந்து அவர் பணத்தை தபால் அலுவலக கணக்கில் வரவு வைத்தபோது, இதுபோன்று வேறுஏதும் நடந்திருக்கிறதா என கண்டறிய 2016- 2024 வரை உள்ள கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.அப்போது, செல்வமகள் சேமிப்புத்திட்டம், சுகன்யா சம்ருதி யோஜனா, சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, குறுகியகால வைப்பு நிதி கணக்கு, மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட திட்டங்களில் 87 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.52 லட்சத்து 5 ஆயிரத்து 650 கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து முனியாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், தலைமறைவானார்.இதுகுறித்து எஸ்.பி., பிரதீப்பிடம், அஞ்சல் ஆய்வாளர் பாண்டியராஜன் புகார் அளித்தார்.
அதன்பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தலைமறைவான முனியாண்டியை தேடினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள மர அறுவை மில்லில் கூலி வேலை செய்துவருவது தெரிந்தது.
போலீசார், முனியாண்டியை கைது செய்து திண்டுக்கல் அழைத்துவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.