மாதாந்திர மின் கட்டண முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
மாதாந்திர மின் கட்டண முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
UPDATED : ஜூன் 13, 2026 11:29 PM
ADDED : ஜூன் 13, 2026 10:02 PM
திண்டிவனம்: தமிழ்நாடு அரசு, ஒருமுறை மின் கணக்கெடுப்பு மற்றும் மின் கட்டண வசூல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, பா.ம.க., நிறுவனரம் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாட்டில் தற்போது வீட்டு மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முழுப் பயனும் பொதுமக்களை சென்றடைய வேண்டுமெனில், மின் கணக்கெடுப்பு மற்றும் கட்டண வசூல் முறையிலும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போதைய இரு மாத கட்டண முறையால் ஒரே நேரத்தில் அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது. மாதம் தோறும் கட்டணம் வசூலிக்கப்படும் போது குறைந்த தொகையை எளிதாக செலுத்த முடியும்.
மாதம் தோறும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் பயன்பாட்டை துல்லியமாக கண்காணிக்க முடியும். தவறுகள் குறைவதோடு, நுகர்வோரும் தங்களது மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழக மின்வாரியத்தில் டிஜிட்டல் மீட்டர்கள், ஆன்லைன் கட்டண வசதிகள் மற்றும் செயலி மூலமான சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மாதாந்திர கட்டண முறையை அமல்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் இருக்காது.
எனவே, தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, உடனடியாக மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு மற்றும் மின் கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
