புதுச்சேரியில் மேம்பாலம் கட்டும் பணி: கவர்னர் கைலாஷ்நாதன் நேரில் ஆய்வு
புதுச்சேரியில் மேம்பாலம் கட்டும் பணி: கவர்னர் கைலாஷ்நாதன் நேரில் ஆய்வு
UPDATED : ஜூன் 01, 2026 11:06 PM
ADDED : ஜூன் 01, 2026 10:34 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் மேம்பாலம் கட்டும் பணியை கவர்னர் கைலாஷ்நாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி- கடலுார் சாலையில், ஏ.எப்.டி., திடல் அருகே உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட் அடிக்கடி மூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரூ.72 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை புதுச்சேரி அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.55 கோடி, ரயில்வே நிர்வாகம் ரூ.17 கோடி என பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. 40 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி - கடலுார் சாலையில் நடந்து வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். கட்டுமான பணிகளின் போது பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, உப்பனாறு கால்வாய் மேம்பால பணிகளை மறைமலை அடிகள் சாலை மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில் பார்வையிட்டார். ஆய்வின்போது, அங்கு வந்த நேரு எம்.எல்.ஏ., பாலம் கட்டுமான பணிகள் மிகவும் தோய்வாக நடைபெறுவதால் காமராஜர் சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கவர்னரிடம் கோரிக்கை வைத்தார்.
அதேபோல் ஜான்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ரிச்சர்ட், ஆகியோர் தங்களின் தொகுதி பிரச்னைகளை கவர்னரிடம் எடுத்துக் கூறினார்கள்.குறைகளைக் கேட்டறிந்த கவர்னர், இதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்கப்படும் எனவும் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும் என உறுதியளித்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை அரசு செயலர் முத்தம்மா, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
