டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பதா? மாணவர்கள், ஐ.டி., துறையினர் எதிர்ப்பு
டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பதா? மாணவர்கள், ஐ.டி., துறையினர் எதிர்ப்பு
ADDED : ஜூன் 17, 2026 05:26 AM

மதுரை: நீட் மறுதேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்ததற்கு போட்டித்தேர்வு மாணவர்கள், ஐ.டி., துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) பரிந்துரையில், நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிவு, மோசடி கும்பல்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை விதிக்கப்படுவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இச்செயலி வெறும் தகவல் தொடர்புக்குமட்டுமில்லாமல், போட்டித் தேர்வுகளுக்கான படிப்புக் குறிப்புகள், ஆன்லைன் வர்த்தகம், தொழில்நுட்ப பயிற்சிகள், ஸ்டார்ட்அப் வழிகாட்டுதல்கள் உள்ளடக்கிய தளமாக செயல்படுகிறது.
போட்டித்தேர்வு மாணவர்கள் கூறியதாவது: தனியார் போட்டித்தேர்வு மையங்களில் அதிக கட்டணம் காரணமாக சேர முடியாதவர்களுக்கு டெலிகிராம் செயலி புகலிடமாக திகழ்கிறது. இதில் யு.பி.எஸ்.சி., வங்கி, ரயில்வே உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு குழுக்கள், சேனல்கள் மூலம் கல்வி சார்ந்த தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. இதில் ஒரே கோப்பாக 4 ஜி.பி., வரை அனுப்பலாம்.
அலைபேசி மெமரியை பாதிக்காத வகையில் 'கிளவுட் ஸ்டோரேஜ்' சேமிப்பது உள்ளிட்ட வசதிகள் படிப்பு சார்ந்த கோப்புகள், மாதிரி தேர்வுத் தாள்களை சேமிக்க வசதியாக இருந்தது. தற்போது டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றனர்.
ஐ.டி., துறையினர் கூறுகையில், 'பல ஐ.டி., நிறுவனங்கள் உள்துறை தகவல் பரிமாற்றம், வேலைவாய்ப்பு அறிவிப்புகள், ஆன்லைன் பயிற்சிகள், வாடிக்கையாளர் சேவைகளுக்காக டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் தவறாக பயன்படுத்து கிறார்கள் என்பதற்காக முழு தளத்தையும் முடக்குவது ஏற்கத்தக்கதல்ல' என்றனர்.
ஸ்டார்ட்அப், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க டெலிகிராமை பயன்படுத்துகின்றன. இதனால் சிறு தொழில்முனைவோர்களும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ரயில்வே துறையிலும் தங்கள் உள்துறை தகவல் பரிமாற்றங்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தடை தற்காலிகமானது என்றும், தேர்வு முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
