அண்ணாதுரைக்கு நாகேந்திரன் புகழாரம்; பா.ஜ.,வினர் கடும் அதிருப்தி
அண்ணாதுரைக்கு நாகேந்திரன் புகழாரம்; பா.ஜ.,வினர் கடும் அதிருப்தி
ADDED : செப் 16, 2025 04:53 AM

சென்னை : முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தது, அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க.,வை துவக்கிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான நேற்று, அவரது படத்துக்கு தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பா.ஜ., கொள்கைகளுக்கு நேர் எதிரானது, தி.மு.க., கொள்கைகள். பா.ஜ.,வைச் சேர்ந்த தலைவர்களுக்கு பெரும்பாலும் தி.மு.க.,வினர் வாழ்த்து கூறுவதில்லை.
இதுபோல, தி.மு.க.,வைச் சேர்ந்த மறைந்த தலைவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்தோ, நினைவு தினத்திற்கு இரங்கலோ, தமிழக பா.ஜ., தலைவர்கள் தெரிவிப்பதில்லை.
இந்நிலையில், அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கண்ணாடி பார்க்காத முகம், விரல்களில் மோதிரமோ, கையில் கடிகாரமோ இல்லாத எளிமையான தோற்றம்.
' தன் சொற்களால் தமிழினத்தையே கட்டிப்போட்ட மாபெரும் தலைவர் அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று.
'தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானாக இல்லாமல், அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் லட்சியமாக கொண்டு வாழ்ந்தவர். அண்ணாதுரையை போற்றி வணங்குவோம்' என கூறப்பட்டிருந்தது.
இது, தமிழக பா.ஜ., தொண்டர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவரை பா.ஜ., தலைவராக்கினால், இப்படி தான் இருக்கும்.
பா.ஜ.,வின் நிறுவன தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அல்லது உங்களின் தற்போதைய பார்ட்னர் பழனிசாமி ஆகியோர் எப்போதாவது வாழ்த்து கூறி இருக்கின்றனரா' என கேட்டு, சமூக வலைதளங்களில் நாகேந்திரனை விமர்சித்து வருகின்றனர்.