முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக விஜய் பேசியதற்கு அண்ணாமலை வரவேற்பு
முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக விஜய் பேசியதற்கு அண்ணாமலை வரவேற்பு
ADDED : செப் 24, 2025 04:52 AM

சென்னை : ''முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக, த.வெ.க., தலைவர் விஜய் பேசிய கருத்தை வரவேற்கிறேன்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
கடந்த, 2024ல் இருந்து பா.ஜ., உடன் பயணம் செய்தவர் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன். சென்னையில் அவரை சந்தித்தது உண்மை.
நவம்பரில் முடிவு எடுப்பதாக, தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் , தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகி உள்ளார். அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினேன்.
அரசியலில் நிரந்தர நண்பர்கள், எதிரிகள் இல்லை. கூட்டணிகள் மாறும்; தலைவர்கள் மாறுவர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தையும் சந்திக்க உள்ளேன்.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக, 'வெளிநாட்டு முதலீடா, வெளிநாடுகளில் முதலீடா?' என நடிகர் விஜய் பேசிய கருத்தை வரவேற்கிறேன்.
ஏனெனில், முதலில் முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு சென்றபோது, அதற்கு முந்தைய நாள், அவரது குடும்பத்தினர், குடும்ப ஆடிட்டர் தனி விமானத்தில் சென்றனர். இது தொடர்பாக, ஏற்கனவே ஆதாரத்துடன் பேசியிருந்தேன்.
முதல்வரின் துபாய், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். விஜய் பேச்சை மறுத்தால், ஒவ்வொரு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் துவங்க வருகின்றன. அப்படி இருக்கும்போது, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று, போட்டோ எடுக்க வைத்து, அதை வெளியிடுகின்றனர்.
முதல்வர் செல்கிறார் என்பதற்காக, ஒரு பன்னாட்டு நிறுவனம், 100 கோடி, 500 கோடி ரூபாய் என முதலீடு செய்யாது.
மத்திய அரசின் இரு பொதுத் துறை நிறுவனங்கள், தமிழகத்தில், 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளங்களை அமைக்கின்றன. இதை, தி.மு.க.,வினர் மறைத்து பேசுகின்றனர். அதன் அடிப்படையில், விஜய் பேச்சை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின் தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றார். அவர் அக்., 1ல் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
அரசியல் செய்யும் சபாநாயகர் அப்பாவு சபாநாயகர் அப்பாவு, கட்சி மாறி வந்தவர். கருணாநிதியை துரோகி, மோசக்காரன் என்று பேசியுள்ளார். தற்போது, தி.மு.க., ஆட்சியில் சபாநாயகராக உள்ளார். இந்தியாவில், ஒரு சபாநாயகர் அரசியல் செய்கிறார் என்றால் முதலிடத்தில் அப்பாவு தான் இருப்பார். அவரின் சொந்த ஊரில் அட்டூழியம் செய்கிறார். நடிகர் ரஜினி ஆன்மிகத்தை பற்றி அறிவுரை வழங்குவார். அவரையும் சமீபத்தில் சந்தித்தேன். அனைவரிடமும் நான் வெளிப்படையாக என் கருத்துகளை பேசி வருகிறேன். - அண்ணாமலை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,