பிஆர்எஸ் கட்சியில் நேற்று சஸ்பெண்ட்... இன்று விலகல்: அறிவிப்பை வெளியிட்டார் கவிதா
பிஆர்எஸ் கட்சியில் நேற்று சஸ்பெண்ட்... இன்று விலகல்: அறிவிப்பை வெளியிட்டார் கவிதா
ADDED : செப் 03, 2025 01:24 PM

ஹைதராபாத்: பாரத் ராஷ்டிரிய சமிதியில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா. அப்பா நடத்தி வரும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்சி. சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சியின் போது கட்டப்பட்ட காலேஸ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்து விழுந்த நிலையில், ஊழல் புகார் எழுந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை என்ற அறிவிக்கப்பட்ட நாள்முதலே, எம்எல்சி கவிதா தமது கட்சியினர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். குறிப்பாக அணை கட்டுமானத்தின் போது அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ் (கவிதாவின் சொந்த தாய்மாமா), எம்பி சந்தோஷ் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதனால் தனது தந்தைக்கு அவப்பெயர் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.
கவிதாவின் ஊழல் குற்றச்சாட்டு, பாரத் ராஷ்டிரிய சமிதியில் பெரும் புயலைக் கிளப்பியது. உட்கட்சி பூசலின் உச்சக்கட்டம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சியில் இருந்து நேற்று கவிதா திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, தந்தை சந்திரசேகர ராவ் தான் பிறப்பித்தார்.
தந்தை - மகள் இடையிலான மோதல் காரணமாக கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார். தமது எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதாகவும், இதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி விட்டதாகவும் கூறி உள்ளார்.