ADDED : செப் 18, 2025 12:06 PM

புதுடில்லி: ஓட்டு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் முதலில் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுமத்தி வருகிறார். ஓட்டு திருட்டு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி வந்த அவர், இன்று சில ஆதாரங்களை வெளியிடுவதாகக் கூறி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது; ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாக்கிறார். தேர்தலுக்கு முன்பும், பிறகும், யாரோ சிலர், நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதை திட்டமாக வைத்துள்ளனர். குறிப்பாக, எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் ஓபிசி மக்களை குறி வைத்து நீக்குகின்றனர். இதற்கு 100 சதவீதம் ஆதாரம் இருக்கிறது. நான் என்னுடைய நாட்டையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நான் மதிக்கிறேன். ஆதாரங்களை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் முடிவு செய்யுங்கள்.
கர்நாடாகவின் ஆலந்த் தொகுதியில் 6,018 ஓட்டுகளை நீக்க முயற்சி செய்தனர். எதிர்பாராதவிதமாக சிக்கி விட்டனர். மென்பொருள் மூலமாக ஓட்டுகளை நீக்குவதற்காக ஆட்டோமெட்டிக்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களின் எண்கள் கர்நாடகா அல்லாத பிற மாநிலங்களைச் சேர்ந்தது. காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர்.
சூர்யகாந்த் என்பவர் 14 நிமிடங்களில் 12 வாக்காளர்களை நீக்கியுள்ளார். நாகராஜ் என்பவர் வெறும் 36 விநாடிகளில் இரு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளார். இது மனிதர்களால் சாத்தியமில்லாத ஒன்று. சாப்ட்வேர் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணை உள்ளீடு செய்து, அனைத்து பூத்களிலும் அதே எண்ணில் உள்ள வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர்.
காங்கிரஸ் பலமாக உள்ள டாப் 10 பூத்களில் பெரும்பாலான வாக்காளர்கள் நீக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு 10 பூத்களில் 8ல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.
கர்நாடகா சிஐடி போலீஸ் 18 மாதங்களில் 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. அதில், இந்த விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட ஐபி முகவரி உள்ளிட்ட விபரங்களை கேட்டது. ஆனால், டில்லி தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏன் அவர்கள் கொடுக்கவில்லை? இவர்கள் தான் அந்த செயலை செய்துள்ளனர். வாக்காளர் முறைகேடு தொடர்பாக 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் முதல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடைசியாக 2025ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதினர். ஆனால், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுவே, இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாப்பதற்கு சான்றாகும். வாக்காளர்களை சட்டவிரோதமாக நீக்கியது யார் என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். இந்த விபரங்களை அவர்கள் வெளியிட மறுத்தால், ஜனநாயகத்தை கொலை செய்பவர்களை பாதுகாப்பதற்கு சமம்.
கர்நாடகா மாநிலம் ஆலந்த் தொகுதியில் நடந்த முறைகேடுகளைப் போலவே, மஹாராஷ்டிராவின் ராஜூராவில் நடந்துள்ளது. ஆலந்த் தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ராஜூராவில் 6,850 வாக்காளர்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டை தான் கர்நாடகா, மஹாராஷ்டிராவில் செய்து வருகிறார்கள். ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே வாக்கு திருட்டை செய்து முடித்து விட்டார்கள்.
ஓட்டு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் முதலில் நிறுத்த வேண்டும். ஓட்டு திருட்டு தொடர்பாக கர்நாடகா சிஐடி போலீசார் கேட்கும் விபரங்களை டில்லி தேர்தல் ஆணையம், ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும், இவ்வாறு கூறினார்.