சிங்கப்பூரில் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்
சிங்கப்பூரில் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்
ADDED : செப் 19, 2025 07:30 PM

புதுடில்லி; சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் சம்பவத்தில் 52 வயதில் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அசாமை சேர்ந்த பிரபல பாடகர் ஜூபீன் கார்க். இவருக்கு வயது 52. இவர், சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் போது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவர் அசாம், பெங்கால், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி இருக்கிறார். பல்வேறு படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் செயல்பட்டு உள்ளார்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக அசாம் திரையுலகில் முன்னணியாக திகழ்ந்து வந்தவர் ஜூபீன் கார்க். இவரது ”யா அலி” என்னும் பாடல் மாபெரும் வெற்றி பெற்றதால் மொழிகளை கடந்தும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.
'இது மிகவும் வேதனையான செய்தி மற்றும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு' என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கல்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பிரபல பாடகர் ஜுபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார்.
அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.