ADDED : செப் 26, 2025 10:41 PM
புதுடில்லி:குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் வாங்கித் தருவதாக மோசடி செய்த உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடில்லி சிவில் லைன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் திக் ஷன் சிங். குடும்பத்துடன் கேரள மாநிலம் சுற்றுலா செல்ல திட்டமிட்டார்.
குறைந்த விலையில் விமான டிக்கெட் என்ற விளம்பரத்தை இணைய தளத்தில் பார்த்த சிங், அதன் வாயிலாக டிக்கெட் பதிவு செய்து, 50,000 ரூபாய் செலுத்தினார். ஆனால், டிக்கெட்டுகளும் வரவில்லை; பணமும் திரும்ப வரவில்லை.
இதுகுறித்து, திக் ஷன் சிங் கொடுத்த புகார்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். திக் ஷன் சிங் அனுப்பிய பணம் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த தனுஜ் அகர்வால்,28, என்பவரால் நடத்தப்படும் யு.டி.எம்., டூரிஸம் சர்வீஸஸ் நிறுவன வங்கிக் கணக்குக்கு சென்றதை கண்டுபிடித்தனர்.
கடந்த 16ம் தேதி டேராடூனில் தனுஜ் அகர்வால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், மோசடிக்கு உதவியாக இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் நகரைச் சேர்ந்த தன்வீர்,30, என்பவர் 18ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சீன நாட்டு மெசேஜிங் செயலி வாயிலாக இந்த மோசடியை செய்து வருவதாக ஒப்புக் கொண்டனர். இருவரிடம் இருந்தும் மொபைல் போன்கள் மற்றும் காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.