ரூ.15 கோடி மதிப்புள்ள 'சாப்ட்வேரு'க்கு ரூ.138 கோடி ஒதுக்கீடு!
ரூ.15 கோடி மதிப்புள்ள 'சாப்ட்வேரு'க்கு ரூ.138 கோடி ஒதுக்கீடு!
PUBLISHED ON : மே 30, 2026 12:00 AM

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “முதல்வர் வீடு இருக்கிற தொகுதிங்கிறதால உஷாரா இருக்காருங்க...” என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“சென்னை, விருகம்பாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர் சபரிநாதன்... இவர், அரசு கொறடாவாகவும் இருக்காருங்க...
“முதல்வர் விஜய் பிறந்ததுல இருந்து, 30 வருஷங்களுக்கு மேலா இந்த தொகுதியில தான் குடியிருந்தாரு... இப்பவும், சாலிகிராமம் பகுதியில விஜய் மற்றும் அவரது பெற்றோருக்கு வீடுகள், திருமண மண்டபம் எல்லாம் இருக்குதுங்க...
“இதனால, தொகுதி வளர்ச்சியில சபரிநாதன் கூடுதல் அக்கறை காட்டுறாரு... தன்னை ஜெயிக்க வச்ச மக்களுக்கு, வீடு வீடா போய் நன்றி சொல்றவர், அப்பவே அவங்களிடம் குறைகளும் கேட்கிறாருங்க...
“மழைநீர் வடிகால், வெள்ள தடுப்பு திட்டம், போக்குவரத்து நெரிசலை தீர்க்க மேம்பாலம், சாலைகளை அகலப்படுத்தணும்னு, அவரிடம் மக்கள் நீண்ட பட்டியல் போட்டிருக்காங்க... இவற்றை எல்லாம் செய்றது சம்பந்தமா, அதிகாரிகளுடன் சபரிநாதன் ஆலோசனை நடத்திட்டு இருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“அரசு உத்தரவை மதிக்க மாட்டேங்காரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“விபத்துகள்ல சிக்கி உயிரிழக்கிறவங்களின் உடல் உறுப்புகளை, அவங்க குடும்பத்தினர் தானம் பண்றாங்கல்லா... இப்படி, உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தணும்னு கடந்த தி.மு.க., ஆட்சியில உத்தரவு போட்டிருந்தாவ வே...
“கோட்டாட்சியர் எனப்படும் ஆர்.டி.ஓ., அந்தஸ்திலான அதிகாரிகள் தான் அரசு மரியாதை செலுத்தணும்... ஆனா, காஞ்சிபுரத்தில் இருக்கிற அதிகாரி, உடல் உறுப்பு தானம் செய்தவங்களுக்கு இறுதி மரியாதை செலுத்த போறதே இல்ல... தனக்கு கீழே இருக்கும் தாசில்தார்களை அனுப்பிட்டு, கமுக்கமா இருந்துடுதாரு வே...” என்றார், அண்ணாச்சி.
“ஆஷிக் அலி இருங்க... இன்னும் அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடலாம்...” என, நண்பரிடம் கூறிய அன்வர்பாயே, “வெறும் 15 கோடி ரூபாய்க்கு, 138 கோடி ரூபாயை கணக்கு காட்டியிருக்காங்க பா...” என்றார்.
“அநியாயமா இருக்கே... விளக்கமா சொல்லும் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“தமிழக அரசு துறைகளில், 'ஆடிட்' நடைமுறைகளை முழுமையா டிஜிட்டல் மயமாக்க, விரிவான தணிக்கை மேலாண்மை அமைப்பு எனும், 'கேம்ஸ்' இணையதளத்தை உருவாக்குனாங்க பா...
“தணிக்கை அதிகாரிகள் நேரடியா ஆய்வு செஞ்சு கண்டுபிடிக்கிற குறைபாடுகள் மற்றும் அதற்கான ஆதார ஆவணங்களை, இந்த இணையதளத்துல பதிவேற்றம் செய்வாங்க... ஒரு வருஷத்துக்கு முன்னாடி, தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த தொழில்நுட்பத்துக்கு, 'சாப்ட்வேர்' உருவாக்க மட்டும், 138 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்காங்க பா...
“ஆனா, 'இந்த சாப்ட்வேரின் மதிப்பு, 15 கோடி ரூபாயைக்கூட தாண்டாது... இதுல நிறைய முறைகேடுகள் நடந்திருக்குது'ன்னு உள்ளாட்சி துறை ஊழியர்கள் புகார் சொல்றாங்க பா...
“அதுவும் இல்லாம, 'இந்த ஆன்லைன் முறையில பெருசா பயன் இல்ல... தணிக்கை முறைகேடுகளை ஆன்லைன்ல சரிசெஞ்சாலும், அது முறையா பதிவாகியிருக்கான்னு உறுதிப்படுத்த முடியல... இது சம்பந்தமா, த.வெ.க., அரசு விசாரணை நடத்தணும்'னும் அவங்க வலியுறுத்துறாங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
