ஆட்சி மாறியும் ஆதிக்கம் குறையாத தனியார் நிறுவனம்!
ஆட்சி மாறியும் ஆதிக்கம் குறையாத தனியார் நிறுவனம்!
PUBLISHED ON : மே 25, 2026 12:28 AM

மெதுவடையை கடித்தபடியே, “வேற வேற இடங்களுக்கு துாக்கி அடிச்சுட்டார் ஓய்...” என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“துாத்துக்குடி எஸ்.பி., தனிப்பிரிவில், 10 வருஷத்துக்கும் மேலா ஒரு போலீஸ்காரர் இருந்தார்... இவர் மீது, பொம்மனாட்டி சகவாசம் தொடர்பா, அடிக்கடி புகார்கள் வர்றது வழக்கம் ஓய்...
“ஆனாலும், அதிகாரிகளை சரிக்கட்டி தப்பிச்சுண்டு இருந்தார்... சமீபத்துல ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, பெண் உதவி அதிகாரியிடம் நெருங்கி பழகியிருக்கார் ஓய்...
“அந்த பெண் அதிகாரிக்கு, 'வாட்ஸாப்'ல சில ஏடாகூடமான படங்களை அனுப்பிட்டார்... இதை, அதிகாரியின் கணவர் பார்த்துட்டதால, குடும்பத்துல பெரிய ரணகளம் ஆயிடுத்து...
“புதுசா வந்த எஸ்.பி., அபிஷேக் குப்தா காதுக்கு இந்த விவகாரம் போக, பெண் அதிகாரி, தனிப்பிரிவு போலீஸ்காரர்னு ரெண்டு பேரையும், வெவ்வேற இடங்களுக்கு துாக்கியடிச்சுட்டார் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“விக்னேஷ், இப்படி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “காலியிடங்களை நிரப்பாம இருக்காங்க...” என்றார்.
“எந்த துறையில ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“சென்னை சைதாப்பேட்டையில், தமிழ்நாடு மீனவர் நலவாரிய அலுவலகம் இருக்குது... 2007ல் துவங்கிய இந்த வாரியத்துக்கு உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் உட்பட ஐந்து பணியிடங்களை உருவாக்குனாங்க...
“ஆனா, வாரியம் துவங்கியதில் இருந்து, 19 வருஷங்களா உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் மட்டுமே பணியில் இருக்காங்க... அவங்களுக்கு அடுத்த மூணு பணியிடங்களுக்கு ஆட்களே நியமிக்கலைங்க...
“இந்த 19 வருஷங்கள்ல, வாரியத்தில் சேர்ந்த மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு... அவங்களுக்கு நிறைய நலத்திட்ட உதவிகளும் வழங்குறாங்க...
“இதை எல்லாம் வாரியம் மூலமாவே செய்றதால, கடும் பணிச்சுமையால ரெண்டு அதிகாரிகளும் திணறிட்டு இருக்காங்க... இதனால, 'த.வெ.க., அரசாவது, காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கணும்'னு மீனவர்கள் கேட்கிறாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“ஆட்சி மாறியும், ஆதிக்கம் குறையல வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், 'சிசிடிவி கேமரா' பொருத்த, 33 கோடி ரூபாய் மதிப்பில், 'எல்காட்' வழியா, 'டெண்டர்' கேட்டிருந்தாவ... இதுக்கு, மூணு நிறுவனங்கள் விண்ணப்பம் போட்டுச்சு வே...
“இதுல, குறைந்த விலையை குறிப்பிட்டிருந்த மும்பை நிறுவனத்துக்கு டெண்டரை குடுத்திருக்கணும்... ஆனா, கடந்த தி.மு.க., ஆட்சியில், எலக்ட்ரானிக்ஸ் துறையில் கொடிகட்டி பறந்த ஒரு நிறுவனம், தங்களுக்கு தான் டெண்டர் வேணும்னு அடம் பிடிச்சிருக்கு வே...
“அதோட, 'நீங்க ஒதுங்கிடுங்க'ன்னு மும்பை நிறுவன அதிகாரிகளையும் மிரட்டியிருக்கு... மும்பை நிறுவனம் பின்வாங்க மறுத்துட்டதால, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அந்த டெண்டரை ரத்து பண்ண முயற்சி நடக்கு... தி.மு.க., ஆட்சியில் செல்வாக்கா இருந்த இந்த நிறுவனம், இப்பவும் அதிகாரம் குறையாம இருக்கு வே...” என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “ஹலோ... என்னது, கே.எஸ்.ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் கம்பெனியா... சாரி, ராங் நம்பர்...” என, 'கட்' செய்தபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
