/தினம் தினம்/சொல்கிறார்கள்/ இனிக்கும் கரும்பு விவசாயம்!

 இனிக்கும் கரும்பு விவசாயம்!

 இனிக்கும் கரும்பு விவசாயம்!

 இனிக்கும் கரும்பு விவசாயம்!

 இனிக்கும் கரும்பு விவசாயம்!

PUBLISHED ON : ஏப் 03, 2026 01:55 AM


Google News
Latest Tamil News
கடந்த, 10 ஆண்டு களாக இயற்கை விவசாயம் வாயிலாக, 8 ஏக்கரில் நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்து வரும், கடலுார் மாவட்டம், வட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதான ஸ்டாலின்:

என் சொந்த ஊர் இது தான். நான் பி.காம்., முடித்து விட்டு, 8 ஏக்கரில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களும், கரும்பும் பயிர் செய்ய ஆரம்பித்தேன்.

இந்த நிலத்துக்கு தமிழக அரசிடம் இருந்து, 'இயற்கை வேளாண்' சான்றிதழ் வாங்கி உள்ளேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், 7 லட்சம் ரூபாய் முதலீட்டில் கரும்பு பிழியும் இயந்திரம், வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை காய்ச்சுவதற்கான உலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கி, தொழில் துவங்கினேன்.

கடந்த, 2023 வரை, 6 ஏக்கரில் கரும்புகள் உற்பத்தி செய்து, நாட்டு சர்க்கரை தயார் செய்து வந்தேன்.

எதிர்பாராத விதமாக, நோய் தாக்குதல் ஏற்பட்டு, கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டதால், மறு ஆண்டில் இருந்து, 2 ஏக்கரில் மட்டும் கரும்புகள் பயிர் செய்து நாட்டு சர்க்கரையும், வெல்லமும் தயார் செய்து விற்பனை செய்கிறேன்.

அதாவது, 1 டன் கரும்புக்கு, 100 கிலோ நாட்டு சர்க்கரையோ அல்லது 100 கிலோ உருண்டை வெல்லமோ தயார் செய்யலாம். 2 ஏக்கரில் பயிரான கரும்புகளை மதிப்பு கூட்டுவதன் வாயிலாக, ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.

நான் தயார் செய்யக் கூடிய நாட்டு சர்க்கரையில், எவ்வித ரசாயனபொருட்களும் சேர்ப்பதில்லை .

அழுக்கு நீக்குவதற்கு, 1 கிலோ நாட்டு சர்க்கரைக்கு, 5 கிராம் வீதம் சமையல் சோடா மட்டும் சேர்க்கிறேன். இதற்கு மாற்றாக, வெண்டைக் காய் சாறு பயன் படுத்தலாம் என்று சில விவசாயிகள் கூறுகின்றனர். அந்த தொழில்நுட்பத்தை அறியும் முயற்சியில் இப்போது இறங்கி இருக்கிறேன்.

நான் தயார் செய்யக் கூடிய நாட்டு சர்க்கரையை , 'வட்டத்துார் ஆர்கானிக் நாட்டு சர்க்கரை' என்ற பெயரில், விதை மற்றும் உணவு திருவிழா, வேளாண் கண்காட்சி மாதிரியான நிகழ்ச்சிகளில் கடை போட்டும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறேன்.

தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறேன். ஆண்டுக்கு, 6 ஏக்கரில் இரண்டு முறை நெல் சாகுபடி செய்வதன் வாயிலாக, 4.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.

மொத்தம், 8 ஏக்கரில் நெல் மற்றும் கரும்பு சாகுபடி வாயிலாக, ஆண்டுக்கு 6.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.

அடுத்து பாரம்பரிய அரிசி, நாட்டு சர்க்கரை கலந்து இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளேன். அதில், கூடுதல் லாபம் வரும்.

தொடர்புக்கு

94435 76759