PUBLISHED ON : மார் 21, 2026 12:11 AM

மகளிர் கல்விக்கு மாபெரும் பங்காற்றி வரும், திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த, டி.ஓ.ஆஷர் என்பவரின் குடும்பத்தார், வியாபாரம் செய்வதற்காக திருப்பூர் வந்தனர். அவர் மனைவி தான், ஜெய்வாபாய். பெண்கள் கல்வியறிவு பெற பள்ளி கட்ட வேண்டும் என்பது ஜெய்வாபாயின் நீண்ட நாள் ஆசை!
கடந்த 1937ல், தன் நான்காவது பிரசவத்தின்போது, தான் இனிமேல் பிழைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த ஜெய்வாபாய், கணவரிடம் தன் நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்திவிட்டு உயிரிழந்தார்.
மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், 1944ம் ஆண்டு, 7.5 ஏக்கர் பரப்பளவில், ஸ்ரீமதி ஜெய்வாபாய் தேவிஸ்ரீ ஆஷர் உயர்நிலைப் பள்ளியை கட்டி, திருப்பூர் நகராட்சிக்கு நன்கொடையாக அளித்தார், டி.ஓ.ஆஷர்.
கடந்த 1978ல், இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது, தமிழக அரசு. தற்போது, 5,500 மாணவியர் படிக்கின்றனர்; 200 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதனால், ஆசியாவிலேயே அதிகமான மாணவியர் படிக்கும் பள்ளி என்ற கவுரவத்தை பெற்றுள்ளது.
காற்றோட்டமுள்ள வகுப்பறைகள், குடிநீர் வசதி, சுத்தமான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவியருக்கு, பிளஸ் 2 முடித்து, எந்த உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தால், அதை ஆசிரியர்கள் தெளிவுப்படுத்துகின்றனர். 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் பள்ளியிலேயே பயிற்சி அளிக்கிறோம்.
எங்கள் பள்ளி மாணவியர் உருவாக்கிய மழைநீர் சேகரிப்பு தொட்டி பற்றி கேள்விப்பட்ட, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாணவியரை நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்தார்.
இந்த பள்ளி நகரின் மையத்தில் உள்ளதால், அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து செல்வதற்கு எளிதாக உள்ளது.
இதனாலேயே, இங்கு மாணவியர் சேர்க்கை அதிகம் நடக்கிறது. இப்பள்ளியில் படிக்கும் எந்த ஒரு மாணவிக்கும் பெற்றோரில் யாராவது ஒருவர் மட்டுமே இருந்தால், தன்னார்வலர்கள் வாயிலாக நிதியுதவி பெற்று, உயர்கல்வியில் சேர உதவுகிறோம்.
பிளஸ் 2 முடித்த பின், உயர் கல்விக்கு பெண் பிள்ளைகளை அனுமதிக்காத பெற்றோரை சந்தித்து பேசி, சம்மதம் பெற்று கல்லுாரியில் சேர்க்கிறோம். அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும், பிறரிடம் உதவி பெற்று செலுத்தி வருகிறோம்.
எங்கள் பள்ளியில் படிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், விளையாட்டுக்கும் கொடுக்கப்படுகிறது. எங்கள் மாணவியர் எந்த விளையாட்டு போட்டிக்கு சென்றாலும், பதக்கங்களை பெற்று வருவர்.
