UPDATED : மே 02, 2026 04:03 PM
ADDED : மே 02, 2026 04:00 PM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் கவிஞர் கல்யாண்ஜியின் 'காற்றைக் கேட்கிறவன்' என்ற கவிதை தொகுப்பு குறித்து, கவிஞர் பிரியா சந்திரன் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நவீன தமிழ் படைப்பிலக்கியத்தின் மிக முக்கியமான கவிஞர் கல்யாண்ஜி. இவர் வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளையும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வருகிறார்.
இயற்கை மீது இவர் கொண்ட அதீத பிரியத்தின் ருசியையும், கவித்துவத்தின் நறுமணத்தையும் இவரது கவிதைகளில் நுகர முடியும். நெல்லையின் மண் வாசத்தையும், தாமிரபரணி ஆற்றின் ஈரத்தையும் உணரலாம்.
இன்றைய இலக்கிய உலகில் கவிதைகளுக்கு தனி இடமும், வரவேற்பும் உள்ளது. இளைஞர்கள் வலைத்தளங்களில் அதிகமாக கவிதைகளை வாசிப்பதும், எழுதுவதும் பகிர்வதுமான சூழல், கவிதைகளுக்கு ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்துள்ளது.
கவிஞர் கல்யாண்ஜி பல ஆண்டுகளாக கவிதைகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். இயற்கையின் மீதான காதலையும், மானுடத்தின் மீதான அன்பையும் கவிதைகளில் வெளிப்படுத்தும் கவிஞர்.
அன்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாமலேயே, அன்பு குறித்த அழகான கவிதைகளை தந்துள்ளார். நாம் அன்றாம் பார்க்கும் எளிய மனிதர்களையும், இந்த உலகின் எல்லா வெளிகளிலும் விரவிக்கிடக்கும் அற்புதமான காட்சிகளையும் இவரது கவிதைகளில் வாசிக்க முடிகிறது.
இருந்து என்ன ஆகப்போகிறது
செத்து தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலையலாம்....
- என்ற இவரது கவிதை வரிகள் சில சமயம் சலிப்பபையும், வாழ்வின் மீது புதிய நம்பிக்கையையும் தருகிறது. பறவையின் அலகு தீண்டிய தானியம் முளைக்கிறது என்ற உணர்வை கல்யாண்ஜியால் மட்டும்தான் எழுத முடியும். அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய கவிதைகள்.
- ஆ.பாண்டி
