அஸ்திவாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் கட்டடம் பாதிக்கப்படும்!
அஸ்திவாரத்தில் குளறுபடி ஏற்பட்டால் கட்டடம் பாதிக்கப்படும்!
ADDED : ஜூன் 06, 2026 05:18 PM

புதிதாக கட்டும் வீட்டின் அஸ்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள கூடாது. இதில், முதலில், தொழில்நுட்ப ரீதியாக வல்லுனர்கள் குறித்து கொடுத்த இடங்களில் தான் அஸ்திவார பள்ளங்கள் தோண்டப்பட வேண்டும்.
இவ்வாறு அஸ்திவார பள்ளம் தோண்டப்படும் இடங்களில், எந்த அளவுக்கு ஈரம் இருக்கிறது என்ற விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சில இடங்களில் அஸ்திவார பள்ளம் தோண்டும் போது மண் அடுக்குகள் ஈரமாக இருப்பதை பார்க்க முடிகிறது.
இதில், மண் அள்ளிய பின் அடுத்த கட்ட பணிகளை துவங்கும் முன் இரண்டு நாட்களுக்காவது பள்ளத்தை அப்படியே விடுவது அவசியம். இவ்வாறு எந்த பணியும் இன்றி அஸ்திவார பள்ளம் காலியாக விடப்படும் சமயத்தில் அதில் தண்ணீர் ஊறுகிறதா என்பது தெரியவரும்.
சில இடங்களில் இயல்பாகவே பள்ளமான பகுதியாக உள்ள நிலத்தில் வெளியில் இருந்து கொண்டு வந்து மண் கொட்டி மேடாக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு புதிதாக கொட்டப்பட்ட மண் அடுக்கை நம்பி புதிய வீட்டுக்கான அஸ்திவாரத்தை அமைப்பது பாதிப்பை ஏற்படுத்தும்.
அஸ்திவார பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில், மெல்லிய அளவில் தண்ணீர் ஊறும் வாய்ப்பு இருந்தால், தொடர் பணிகள் மேற்கொள்வதில் அணுகுமுறையை மாற்ற வேண்டும். தண்ணீர் ஊறிய இடத்தில் மேலோட்டமாக நீரை அப்புறப்படுத்திவிட்டு கான்கிரீட் பணிகளை மேற்கொள்ள கூடாது.
நிலத்தில் மண் பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கும் போதே, அங்குள்ள இயல்பான மண் அடுக்கு என்ன, மேல்மட்ட மண் அடுக்கு என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, கட்டட கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் அடி ஆழம் வரை சென்று உறுதியான மண் அடுக்கை கண்டுபிடிக்க வேண்டும்.
மண் அடுக்கின் உண்மை தன்மை அதில் காணப்படும் ஈரப்பதம் ஆகிய விஷயங்களை உரிய முறையில் ஆய்வு செய்து அஸ்திவாரம் அமைக்க வேண்டும். இதில் லேசான கவனக்குறைவு கூட கட்டடத்தின் உறுதி தன்மையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அஸ்திவரம் அமைக்கும் போது அதற்கான கம்பி கூடுகள் எக்காரணம் கொண்டும், மண்ணை நேரடியாக தொட கூடாது. பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தி, அதில், துாணுக்கான மேட் எனப்படும் கம்பிக்கூட்டை அமைக்கும் போது கவர்பிளாக் பயன்பாடு ஆகியவற்றில் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.
மண் அடுக்கின் உண்மை தன்மை அதில் காணப்படும் ஈரப்பதம் ஆகிய விஷயங்களை உரிய முறையில் ஆய்வு செய்து அஸ்திவாரம் அமைக்க வேண்டும்
