சென்ட்ரிங் பலகையில் கசிவு ஏற்படாமல் தடுப்பது எப்படி?
சென்ட்ரிங் பலகையில் கசிவு ஏற்படாமல் தடுப்பது எப்படி?
ADDED : ஏப் 11, 2026 07:05 AM

வீ ட்டுக்கான கட்டுமான பணியில் ஒவ்வொரு நிலையிலும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதில் கட்டுமான பணிக்கு ஒவ்வொரு நிலையிலும் தரமான பொருட்களை வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது, அது முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெரும்பாலான கட்டடங்களில் கட்டுமான பணிகள் தரமாக நடக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு முறையாக பூர்த்தியாக வேண்டும் என்றால் அதற்கான சில விஷயங்களை துல்லியமாக கவனிக்க வேண்டும்.
கட்டடத்தில் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள் தொடர்பான பணிகளை காட்டிலும் மேல்தளத்துக்கான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேல்தளம் அமைப்பதில் தரமான கம்பிகளை தேர்வு செய்வது, சரியான கான்கிரீட் கலவை வாங்குவதுடன் அனைத்தும் முடிந்துவிடும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதில் கட்டுமான பணியில் மேல்தளத்துக்கான கான்கிரீட் போடுவதற்கு முன் சென்ட்ரிங் பலகைகள் அடிப்பது வழக்கம். முந்தைய காலங்களில் இதில் மரப்பலகைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இரும்பு பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கான வேலையை ஒப்பந்ததாரரும், பணியாளர்களும் கவனித்துக்கொள்வார்கள் என்று அலட்சியமாக இருக்காதீர். உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியின் போது சென்ட்ரிங் பலகைகள் அமைத்த பின் அதில் மெல்லிய இடைவெளிகள் காணப்படும்.
இதன் மேல் கம்பி கூடுகள் வைத்து கான்கிரீட் போடப்போகிறோம் என்பதால், இந்த இடைவெளிகளால் என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், கான்கிரீட் கொட்டும் போது, அதில் இருக்கும் திரவ நிலை சிமென்ட் பால், இந்த இடைவெளி வாயிலாக கசிந்துவிடவாய்ப்பு உள்ளது.
இதனால், கான்கிரீட் இறுகும் போது விரிசல்கள் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பிரச்னையை தடுக்க வேண்டும் என்றால், சென்ட்ரிங் பலகைகள் அடித்த பின் அதில் காணப்படும் இடைவெளியை மூட, டேப் ஒட்டுவது அவசியம் என்பதை புரிந்து செயல்படுங்கள்.
இவ்வாறு டேப் ஒட்டி இடைவெளி மூடப்படும் நிலையில் கான்கிரீட் கலவையில் உள்ள சிமென்ட் பால் கசிவு முழுமையாக தடுக்கப்படும். இதனால், மேல்தளத்துக்கான கான்கிரீட் கலவை எவ்வித பிரச்னையும் இன்றி உறுதியாவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
மேல்தள கான்கிரீட் பணிகளை செய்யும் போது சென்ட்ரிங் பலகைகள் அடித்த பின் அதில் காணப்படும் இடைவெளியை டேப் ஒட்டி மூடுவதால், கலவையில் உள்ள திரவ நிலை சிமென்ட் கசிவதை தடுக்கலாம்.
