பழகி பார்த்தால் நமக்கும் சிறகு முளைக்கும்! தலைமுறைகளை தாண்டி நிற்கும் உறவு
பழகி பார்த்தால் நமக்கும் சிறகு முளைக்கும்! தலைமுறைகளை தாண்டி நிற்கும் உறவு
ADDED : மார் 14, 2026 06:43 AM

''ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட இரு தலைமுறை உறவுகளோடு வாழ்பவை எக்ஸாடிக் பறவைகள்'' என, ஆச்சரிய தகவலை சொல்லி புருவம் உயர்த்த வைக்கிறார், ஜெகன்.
சென்னை, பூந்தமல்லியில் உள்ள ஜே.கே., பெட்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரான இவர், எக்ஸாடிக் பறவைகளின் தனித்துவம்குறித்து நம்மிடம் பகிர்ந்தவை:
எக்ஸாடிக் பறவைகளில், பெரிய வகை பறவைகள் கிட்டத்தட்ட, 40-80 ஆண்டுகள் வரை வாழும். அதிகபட்சம், ஒரு கோடி ரூபாய் வரை சந்தையில் விற்கப்படுகிறது. இவற்றை வாங்கும் முன், சிறிய வகை பறவை வளர்த்த அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
சாம்பல் கிளி
காங்கோ சாம்பல் கிளி, அளவில் சற்று பெரியதாகவும், சாம்பல் நிறத்திலும் காணப்படும். இவை 30,000-45,000 ரூபாய் வரை சந்தையில் விற்கப்பகிறது.
குணாதிசயம்: தனக்கு உணவளிக்கும், விளையாடும் ஒரு நபரை மட்டுமே உரிமையாளராக ஏற்கும். மற்றவர்களிடம் அதிகம் பழகாது. சற்று கூச்ச சுபாவம் இருப்பதால், புதியவர்களிடம் எளிதில் செல்லாது. இக்கிளியால், அதிகபட்சம் 1,000 வார்த்தைகள் வரை புரிந்து கொள்ள முடியும். ஆனால், 18 வார்த்தைகள் வரை மட்டுமே பேசும். எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும்.
பஞ்சவண்ணக்கிளி
சிவப்பு, ஊதா, பச்சை, மஞ்சள் ஆகிய நான்கு வண்ணங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு நிறக்கலவையில், வெவ்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன. இவை, ஒரு லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை சந்தையில் விற்கப்படுகிறது.
குணாதிசயம்:
இதற்கு பயிற்சி அளித்தால், மனிதர்கள் பேசுவதை போல, சத்தமாக, தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்கும். எல்லோரிடத்திலும் எளிதில் பழகும். இது, நன்கு வளரும் என்பதால், வளர,வளர இதன் கூண்டு அளவை மாற்ற வேண்டும். இது கூண்டுக்குள் பறக்க முடியாமல், வால் பகுதி பாதிக்கப்பட்டால், அவ்வலியில் இருந்து எளிதில் மீண்டு வராது.
கொண்டைக்கிளி
குணாதிசயம்: இதன் அலகால், தன் கூண்டையே உடைக்கும் அளவுக்கு வலிமையானது. ஆனால், இந்த ஆக்ரோஷத்தை மனிதர்களிடம் வெளிப்படுத்தாது. இதை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். ஆனால், இதனுடன் நேரம் செலவிட வேண்டும். இது மன அழுத்தத்துக்கு ஆளானால், தன் இறக்கையை தாமே பிய்த்து கொள்ளும். இவ்வாறு, தெரிவித்தார்.
