ADDED : ஏப் 16, 2026 03:55 AM

- நமது நிருபர் -
உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுகா, மாலா என்ற கிராமத்தில் அமைந்து உள்ளது ஜோயி சரஹூண்டி நீர்வீழ்ச்சி.
இக்கிராமத்தில் உள்ள பரசுராம் கோவில் அருகில், நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை அமைந்துள்ளது. இங்கு நம் வாகனத்தை நிறுத்தி விட்டு, 2 கி.மீ., உள்ளே நடந்து செல்ல வேண்டும்.
செல்லும் வழியில், அழகிய பழமையான வீடுகள் உள்ளன. ஆனால் அங்கு யாரும் வசிப்பதில்லை. கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே பனி மூட்டத்தை காணலாம்.
பல சிறிய ஓடைகளை தாண்டி செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சி அருகில் செல்லும் போது, பெரிய ஓடையை தாண்டும் வகையில், மூங்கில் மரத்தில் கட்டப்பட்ட பாலத்தில் செல்ல வேண்டும். சிறிது துாரம் சென்றதும், அழகிய ஜோயி சரஹுண்டி நீர் வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.
அதிக ஆழம் இல்லை என்றாலும், நீச்சல் தெரிந்தவர்கள் அங்கு செல்வது நல்லது. அதேபோன்று, நீச்சல் தெரியாதவர்கள், ஆழம் குறைந்த இடத்தில் குளிக்கலாம்.
வழக்கமான மலையேற்ற தலமான இங்கு, பலர் மீண்டும் மீண்டும் வர விரும்புவர்.
நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு செல்ல வேண்டுமானால், இன்னும் 2 கி.மீ., நடக்க வேண்டும்.
அட்டை பூச்சிகளுக்கு பெயர் பெற்ற மேற்கு தொடர்ச்சி மலையில், இந்த நீர்வீழ்ச்சிக்கு மழை காலத்தில் செல்லும் போது ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்.
காட்டில் சில சுவாரஸ்யமான அரி ய வகை பறவைகள், பாம்புகளை காணலாம். அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், கடந்து செல்லலாம். இந்த இடம் அதிகம் அறியப்படாததாலும், பாதைகள் அபாயகரமானதாகவும், கடினமானதாகவும் இருப்பதால், இங்கு மக்களின் கூட்டம் அவ்வளவாக இருக்காது.
செல்வது எவ்வாறு?
1 விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள மாலா கிராமத்துக்கு டாக்சியில் செல்லலாம்.
2 ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து உள்ளூர் பஸ், டாக்சியில் மாலா கிராமத்துக்கு செல்லலாம்.
3 பஸ்சில் செல்வோர், கார்காலா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள மாலா கிராமத்துக்கு பஸ்கள், டாக்சிகளில் செல்லலாம்.
