ADDED : ஏப் 16, 2026 03:56 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் விஜயநகரா மாவட்டத்தில் ஹம்பி உள்ளது. இது, சுற்றுலாவுக்கு பெயர் போன இடமாகும். இங்கு ஏராளமான கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள், கட்டட கலைக்கு முக்கியத்துவம் அளித்து கட்டப்பட்டதாகும்.
இங்குள்ள சிற்பங்களை பார்க்க வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் கூட்டமாக வருகின்றனர். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கிலான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
இப்படி பெயரும், புகழும் வாய்ந்த ஹம்பிக்கு அருகில் ஒரு தீவு இருக்கிறது. அந்த தீவில் என்னென்ன சாகசங்கள் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஹம்பியில் இருந்து 26 கி.மீ., தொலைவில் சனாபூர் ஏரி உள்ளது. ஏரி அமைந்துள்ள பகுதிக்கு நடுவே மலைபோல பாறைகள் குவிந்து கிடக்கின்றன.
இது பார்ப்பதற்கு தீவு போலவே இருக்கும். இதனால், உள்ளூர் வாசிகள், சுற்றுலா பயணியர் சனாபூர் தீவு என அழைக்கின்றனர். இங்கு சுற்றிப்பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.
மாலை மங்கும் நேரம் இந்த ஏரியில் நீந்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால், நீச்சல் தெரிந்திருப்பது கட்டாயமாகும். நீச்சல் தெரியாதவர்கள், 'லைப் ஜாக்கெட்டுகள்' அணிந்து குளிக்கலாம். இங்குள்ள பாறைகள் மீதிருந்து ஏரியில் குதித்து மகிழ்வர். இங்கு மதிய நேரங்களில் வருவதை தவிர்க்கவும். ஏனெனில், வெயில் அதிகமாக இருக்கும். இதனால், மாலை நேரங்களில் அதிகம் பேர் வருகின்றனர்.
அதுபோல, ஏரியில் பரிசல் சவாரி செய்வதற்கு அனுமதி உண்டு. ஒரு நபருக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இங்கு காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சுற்றிப்பார்ப்பதற்கு அனுமதி உண்டு. காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை படகில் சவாரி செய்யலாம். பரிசலில் 20 நிமிடம் வரை சவாரி செய்யலாம். படகு சவாரி, ஏரியில் குளியல் என மகிழலாம்.
பாறைகளில் ஏரி விளையாடும் போது கவனமாக இருப்பது அவசியம். குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது சிறப்பு.
அதுபோல, ஸ்பீக்கர், லைட்டர், மது, பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதியில்லை. இங்கு வீடியோ, படங்கள் எடுத்து மகிழலாம். இதை சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் மகிழலாம். மொத்தத்தில், அருமையான பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
