ADDED : மார் 26, 2026 12:43 AM

- நமது நிருபர் -: கர்நாடகாவின் குடகு மாவட்டம் காபி மற்றும் சுற்றுலா இரண்டுக்கும் பெயர் போனது. இங்கு திரும்பும் திசையெல்லாம் காபி தோட்டங்களும், சுற்றுலா தலங்களும் உள்ளன. இந்த மாவட்டம் சுற்றுலா பிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. இங்கு நிலவும் அமைதியான இயற்கையான சூழலை பார்ப்பதற்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
குடகின் மடிகேரி பகுதிக்கு அருகிலுள்ள பரபோல் ஆறு சுற்றுலா பயணியரை அதிகம் ஈர்க்கிறது. இந்த ஆற்றில் படகு சவாரி மிகவும் பிரபலமானது.
இந்த படகு சவாரி மிகவும் சவாலானது. 'திரில்லிங்' அனுபவத்தை கொடுக்கும். 13 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே படகு சவாரி செய்ய முடியும். படகில் சவாரி செய்வோர், 'லைப் ஜாக்கெட்டுகள், ஹெல்மெட்'களை கட்டாயம் அணிய வேண்டும்.
இனிய அனுபவம் இந்த வகை படகுகளில் 8 முதல் 10 பேர் வரை பயணிக்கலாம். அனைவருக்கும் துடுப்புகள் கொடுக்கப்படும்.
இந்த படகுகளை இயக்குவதற்கு ஓட்டுநர் என யாரும் இருக்க மாட்டார். சுற்றுலா பயணியரே படகை ஓட்டி செல்ல வேண்டும்.
வேகமாக ஓடும் தண்ணீரில் நண்பர்களுடன் சேர்ந்து துடுப்பு போட்டு கொண்டு படகை இயக்குவது அருமையான அனுபவமாக இருக்கும்.
இந்த பயணத்தில், படகு பாறைகளில் மோதும் அபாயமும் இருக்கும்.
ஆனால், பயணியருக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படாது. ஏனெனில், பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கும்.
அதுபோல, படகில் பயணிக்கும் போது சிலர் தவறி ஆற்றில் விழ வேண்டிய சூழலும் ஏற்படலாம். அவர்கள் லைப் ஜாக்கெட்டுகள் அணிந்து இருப்பதால் பத்திரமாக கரை ஒதுங்கிவிடுவர்.
மேலும், அவர்களை காப்பாற்ற தன்னார்வலர்களும் இருப்பர். எனவே, உயிருக்கு எந்த பிரச்னையும் கிடையாது.
மீன் உணவுகள் இது முற்றிலும் அருமையான சாகசமாக இருக்கும். வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தும். படகு சவாரி முடிந்ததும் ஆற்றின் கரையோரங்களில் உள்ள உணவகங்களில் கிடைக்கும் மீன்களை சாப்பிட்டு மகிழலாம். இவை சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்.
இங்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை படகு சவாரி செய்யும் போது இன்னும் சிறப்பான அனுபவம் கிடைக்கும்.
காரணம், இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் பாய்ச்சல் அதிகமாக இருக்கும். படகில் பயணிக்க ஒரு நபருக்கு 1,200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதே பகுதியில் சிறுவர், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் உள்ளன. இங்கு கயிற்றை கட்டிக்கொண்டு சிறிய கட்டைகள் மீது நடப்பது போன்ற விளையாட்டு போட்டிகள் இருக்கின்றன.
இதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் இது மறக்க முடியாத அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
இந்த இடத்திற்கு பஸ்சில் செல்வதை விட சொந்த வாகனங்களில் செல்வதே சிறப்பு. ஏனெனில், அப்போது தான் செல்லும் வழியில் உள்ள காபி தோட்டங்களை பார்த்து ரசிக்க முடியும்.

