ADDED : மே 11, 2026 02:40 AM
- நமது நிருபர் -
சிக்கமகளூரில், நாரத ஜெயந்தியை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன், 'வந்தே மாதரம்' என்ற டிரஸ்ட் சார்பில், மூத்த குடிமக்களுக்காக போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. சிக்கமகளூரு மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான, 3 கி.மீ., 'வாக்கிங்' போட்டி நடந்தது.
'திரிலோக சஞ்சாரா' என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டியில், பெருமளவிலான பெண்கள் பங்கேற்றனர். இளம் பெண்களே வெட்கப்படும் அளவுக்கு, மூதாட்டிகள் உற்சாகத்துடன் நடை போட்டு, அனைவரையும் கவர்ந்தனர்.
இதில் வெற்றி பெற்றவருக்கு, முதல் பரிசாக 3,333 ரூபாய், இரண்டாம் பரிசாக, 2,222 ரூபாய், மூன்றாம் பரிசாக, 1,111 ரூபாய் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில், மஞ்சுளா, 66, என்பவர் முதல் பரிசு, தாரா, 63, இரண்டாம் பரிசு, புஷ்பலதா மூன்றாம் பரிசு பெற்றனர். இந்த வயதிலும் இவர்களின் உற்சாகத்தை கண்டு, சிக்கமகளூரு மக்கள் வியந்தனர். சாதனைக்கு வயதோ, முதுமையோ தடையில்லை. மனம் இருந்தால் போதும் என்பதை இப்பெண்கள் நிரூபித்துள்ளனர்.
இதே போல, மற்ற மாவட்டங்களிலும், சிறப்பு நாட்களில், பெண்களுக்கு இத்தகைய போட்டிகள் நடந்தால், அவர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். முதியோர் இல்லங்களில் போட்டி நடத்தினால், அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பர்.
