மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அரணாக இருக்கும் டாக்டர் சசிகலா
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அரணாக இருக்கும் டாக்டர் சசிகலா
ADDED : ஏப் 26, 2026 11:44 PM

- நமது நிருபர் -:
'ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்' எனும் தொழிற்சார் சிகிச்சையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அரணாக திகழ்கிறார் மைசூரை சேர்ந்த டாக்டர் சசிகலா.
கடந்த 35 ஆண்டுகளாக ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பணியில் ஈடுபட்டுள்ளார். வளர்ச்சிசார் குறைபாடு உள்ள குழந்தைகளை வளர்க்கும் நுாற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அரணாக இருந்துள்ளார். 'புட்டா ஹெஜ்ஜே' எனும் சிறு படி என்ற அமைப்பை துவக்கி, பல குழந்தைகளுக்கு அரணாக உள்ளார்.
சசிகலா கூறியதாவது:
சிறு குழந்தைகளுக்கு முதல் ஐந்து ஆண்டுகளில் மூளை வேகமாக வளரும். இந்த வயதில் குழந்தைகளிடம் ஏற்படும் வளர்ச்சியில் தாமதங்களை கண்டறிவதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
இத்தகைய குழந்தைகளிடம் ஏற்படும் சிறிய முன்னேற்றம், அக்குடும்பங்களுக்கு எவ்வளவு பெரிய நிம்மதியை தரும் என்பதை நான் அறிவேன். மாண்டியா மாவட்டம், மத்துாரை சேர்ந்த மூதாட்டி ஒருவர், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தன் பேரனை என்னிடம் அழைத்து வந்தார். அவருக்கு எளிய சிகிச்சை மற்றும் வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டது. இதன் மூலம், தன் பேரனை சிறப்பாக நிர்வகித்து, ஓரளவு நிம்மதி அடைந்தார்.
இதுபோன்று மற்றொரு நிகழ்வில், ஆரம்பத்தில் எந்த எதிர்வினையும் காட்டாத 10 மாத குழந்தை ஒன்று, சிகிச்சை துவங்கிய சில மாதங்களில், தன் பெற்றோரை அடையாளம் கண்டு, புன்னகைக்க துவங்கியது.
தங்கள் குழந்தை நடப்பது, பேசுவது, விளையாடுவது அல்லது பழக்க வழக்கங்களில் ஏற்படும் தாமதங்களை பெற்றோர் கவனிக்க வேண்டும். ஒரு குழந்தை, விளையாடுவது, கற்பது, தொடர்புகொள்வது அல்லது இயங்குவது போன்றவற்றில் பின்தங்கியிருந்தால், அது வளர்ச்சி தாமதத்தின் அறிகுறியாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுப்பதுடன், குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
ஆனால், சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் விரைவில் பலன்களை எதிர்பார்க்கின்றனர். சிகிச்சையால் உடனடி தீர்வு காண முடியாது என்பதை புரிந்து கொள்வதில்லை. சிலர் நிதி அல்லது நடைமுறை சிக்கல்கள், சமூக அழுத்தம் போன்ற காரணத்தால், சிகிச்சையை நிறுத்தி விடுகின்றனர்.
இவ்விஷயத்தில் பெற்றோர் தரப்பில் குழந்தையின் தாய் அதிகளவில் பொறுப்புகளை சுமக்கிறார். அதே சமயம் தந்தைகளின் ஈடுபாடு குறைவாகவே உள்ளது. குழந்தை விரைவில் நலம் பெறுவதில் இருவருக்கும் பங்குள்ளது.
புட்டா ஹெஜ்ஜே என்பது ஒரு லாபநோக்கமற்ற அமைப்பு என்பதால் நிதி பெறுவது சவாலாக உள்ளது. மக்கள் பெரும்பாலும் உபகரணங்களுக்கு நன்கொடை அளிக்க முன்வந்தாலும், ஊழியர்களின் சம்பளம் போன்ற தொடர்ச்சியான செலவுகளுக்கு நிதி திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது.
சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு ஆதரவிற்காக, பல பெருநிறுவனங்களை அணுகி வருகிறோம். உள்ளூர் சேவை கழகங்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு, இதுவரை எங்கள் பணியைத் தொடர எங்களுக்கு உதவியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
27_Article_0001, 27_Article_0002
சசிகலா. (அடுத்த படம்) குழந்தைகளுக்கு வீடுகளில் எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்று பெற்றோருக்கு விளக்குகிறார்.
