அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டாக்டருக்கு 14 ஆண்டுகள் சிறை; மருந்து மோசடியில் குற்றம் நிரூபணம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டாக்டருக்கு 14 ஆண்டுகள் சிறை; மருந்து மோசடியில் குற்றம் நிரூபணம்
ADDED : செப் 26, 2025 09:22 PM

நியுயார்க்; அமெரிக்காவில் மருந்து மோசடியில் சிக்கிய இந்திய வம்சாவளி டாக்டருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் டாக்டர் நீல் ஆனந்த் (48). இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 2001ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் போது முன்கள பணியாளராக செயல்பட்டு, பல பேருக்கு சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றியவர்.
பென்சில்வேனியாவில் கிளினிக்குகள் நடத்தி வரும் நீல் ஆனந்த், அங்கு சிகிச்சைக்கு வருபவர்களிடம் ஆக்சிகோடோன் எனப்படும் போதை தரக்கூடிய மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான அவசியமற்ற மருந்துகளை விநியோகித்து, அதற்கு பிரதிபலனாக மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.19 கோடியை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவர் மீது, 2019ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, பென்சில்வேனியா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பென்சில்வேனியா நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்தது.
இந் நிலையில், அவருக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நீல் ஆனந்துக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.