'உலகை' வெல்லுமா இந்தியா... பைனலில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
'உலகை' வெல்லுமா இந்தியா... பைனலில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
ADDED : நவ 02, 2025 06:17 AM

நவி மும்பை: பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இன்று இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. 1983ல் ஆண்கள் அணி முதல் கோப்பை வென்றது போல, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, முதல் கோப்பை வெல்ல காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நவி மும்பையில் இன்று நடக்கும் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் கேப்டனாக உள்ள வலிமையான தென் ஆப்ரிக்க அணியை சந்திக்கிறது.
இதுவரை ஐ.சி.சி., தொடரில் இந்திய பெண்கள் அணி ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை. இன்று சாதிக்கும் பட்சத்தில், பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சி இந்தியாவில் வேகம் எடுக்கும்.
லீக் சுற்றில் 7 போட்டியில் 3ல் மட்டும் வென்ற (3 தோல்வி, 1 முடிவில்லை) இந்தியா, அரையிறுதிக்கு முன்னேற பெரும்பாடு பட்டது. இதில் இமாலய ரன் 'சேஸ்' செய்து, 7 முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியேற்றியது.
ஜெமிமா நம்பிக்கை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89), விடா முயற்சியுடன் போராடிய ஜெமிமா (127*) அணி வெற்றிக்கு உதவினர். இன்று பைனலில் ஸ்மிருதி மந்தனா (8 போட்டி, 389 ரன்), மீண்டும் அணிக்கு திரும்பிய ஷைபாலி, நல்ல துவக்கம் தர வேண்டும். ரிச்சா (201), ஆல் ரவுண்டர் தீப்தி (157 ரன், 17 விக்.,), பலமாக திகழ்கிறார்.
பவுலிங்கை பொறுத்தவரையில் ஸ்ரீ சரனி (13), கிராந்தி (9) விக்கெட் வேட்டைக்கு உதவுகின்றனர். சுழலில் ராதா நம்பிக்கை தரலாம்.
வெற்றிக்கு 'ரெடி' தென் ஆப்ரிக்க அணி லீக் சுற்றில் 7ல் 5 ல் வென்றது. இரு முறை 100க்கும் குறைவான ரன்னில் (69, 97) ஆல் அவுட்டானது. எனினும் இத்தொடரில் அதிக ரன் எடுத்த 'நம்பர்-1' லாரா (470 ரன்) தலைமையில் சிறப்பாக மீண்டு வந்துள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்தை சாய்த்து, முதன் முறையாக பைனலுக்குள் நுழைந்தது.
அனுபவ மரிஜான்னே காப் (204 ரன், 12 விக்.,), நாடின் டி கிளர்க் (190, 8), டிரையான் (167, 5) என பலர் 'ஆல் ரவுண்டர்களாக' இருப்பது கூடுதல் பலம். தஸ்மின் பிரிட்ஸ் (212) தன் பங்கிற்கு ரன் சேர்க்கிறார். பவுலிங்கில் மிலபா (12 விக்.,) 'சுழல்' ஜாலம் நிகழ்த்தலாம்.

