'துரதிருஷ்டவசமாக தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டோம்'
'துரதிருஷ்டவசமாக தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டோம்'
ADDED : ஜூன் 02, 2026 04:59 AM

திருச்சி: ''ம.தி.மு.க., வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டனர்,'' என, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள, முதல்வர் விஜய், சென்னையில் இருந்து திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வரவேற்றார். பின், துரை அளித்த பேட்டி: -
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், வழக்கு போடுவது, கைது நடவடிக்கை போன்றவற்றில் எவ்வித தாமதமும் இல்லை. தி.மு.க., ஆட்சியிலும் கடன் சுமை இருந்தது. அதனால் தான், நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான், மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தினர்.
இந்த அரசும், சில வாக்குறுதிகளை அளித்துள்ளது. காலப்போக்கில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பது என் கருத்து. சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால், இன்று, தமிழக வெற்றிக் கழகத்திற்க்கு ஆதரவு கொடுக்கும் சூழல் இல்லை.
தற்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். அது, கட்சித் தாவல் சட்டத்துக்குள்ளும் வராது; குதிரை பேரத்துக்குள்ளும் வராது. அந்த இயக்கத்தின் நிலைப்பாட்டிலும், தலைமை மீது திருப்தி இல்லாததாலும், பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த, 2006ல், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த கம்பம் ராமகிருஷ்ணன், பதவியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க.,வில் இணைந்து எம்.எல்.ஏ.,வானார். அ.தி.மு.க.,வில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், 2009ல் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க.,வில் இணைந்து போட்டியிட்டார்.
குற்றச்சாட்டு வைக்கும் இயக்கத்தினர், கடந்த காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லையா? எனவே, கண்ணாடி கூண்டில் இருந்து கொண்டு, அடுத்தவர்கள் மீது கல்லெறியக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
