தானியங்கி பட்டா மாறுதல் தொழில்நுட்ப கோளாறுகளை சீரமைக்க நடவடிக்கை
தானியங்கி பட்டா மாறுதல் தொழில்நுட்ப கோளாறுகளை சீரமைக்க நடவடிக்கை
ADDED : ஜூன் 13, 2026 02:20 AM
சென்னை: தானியங்கி பட்டா மாறுதல் பணிகளில் காணப்படும் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாக, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பத்திரப்பதிவு அடிப்படையில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கும் பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பான செய்தி, நம் நாளிதழில், கடந்த 10ம் தேதி வெளியானது.
அதன் எதிரொலியாக, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், உயர் நிலை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.குமார் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
சொத்துக்களை முழுமையாக வாங்குவோருக்கு, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாறுதல் வழங்கும் திட்டம், மக்களின் வசதிக்காக செயல்படுத்தப்படுகிறது.
இதில் சில பிரச்னைகளால், உரிய காலத்தில் பெயர் மாற்றம் நடப்பதில்லை என, புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதில் காணப்படும் பிரச்னைகள் குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை, பதிவுத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். பத்திரப்பதிவின்போது, பட்டா பெயர் மாற்றத்துக்கான தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதில், சில தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோளாறுகளை சரி செய்ய, வருவாய் மற்றும் நில அளவை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
இதனால், சொத்து விற்பனை பத்திரப்பதிவு முடிந்தவுடன், சில நாட்களிலேயே தானியங்கி முறையில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதியம் போன்ற காரணங்களுக்கு விண்ணப்பித்தால், அதன் மீதான பரிசீலனையை, ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், 15 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
