சம்பள உயர்வில் முரண்பாடு தவிப்பில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள்
சம்பள உயர்வில் முரண்பாடு தவிப்பில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள்
ADDED : செப் 14, 2025 07:22 AM

தேனி: காவல் துறையில் 1993ல் பணியில் சேர்ந்த போலீஸ்காரர்களை விட, இரு ஆண்டுகளுக்கு பின், 1995ல் பணியில் சேர்ந்த போலீஸ்காரர்கள் கூடுதல் சம்பளம் பெறுவதாக புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 1993ம் ஆண்டில், 9,000த்திற்கும் அதிகமானவர்கள் போலீஸ்காரர்களாக பணியில் சேர்ந்தனர். இவர்களுக்கு 2018ல் சிறப்பு எஸ்.ஐ.,களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவர்களுக்கு இரு ஆண்டுகளுக்குப்பின், 1995 'பேட்ச்'சில் சேர்ந்தவர்கள், 2020ல் சிறப்பு எஸ்.ஐ.,களாக பதவி உயர்வு பெற்றனர். தற்போது இரு பேட்சை சேர்ந்தவர்களும் ஒரே விகித ஊதியம் பெறுகின்றனர்.
கடந்த 1995 பேட்ச் போலீசாருக்கு, ஆண்டு தோறும் ஜனவரியில் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. 1993ல் சேர்ந்தவர்களுக்கு ஜூலையில் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது இரு ஆண்டுகளுக்கு பின் பணியில் சேர்ந்த அவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இது குறித்து 1993 பேட்ச் சிறப்பு எஸ்.ஐ.,கள் கூறியதாவது:
கடந்த, 1995ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு 2025 ஜனவரியில், 57,400 ரூபாயாக சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், அதே ஜனவரியில் 1993ல் சேர்ந்தவர்கள், 55,700 ரூபாய் சம்பளம் பெற்றோம். ஆறு மாதங்களுக்கு பின், ஜூலையில் 57,400 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும். 1993ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என அரசிற்கும், போலீஸ்துறைக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.