தடையின்மை சான்று தேவைப்பட்டால் சுயசான்று முறை கட்டட அனுமதி இல்லை
தடையின்மை சான்று தேவைப்பட்டால் சுயசான்று முறை கட்டட அனுமதி இல்லை
ADDED : மே 13, 2026 12:34 AM
சென்னை:'பிற துறைகளின் தடையின்மை சான்று தேவைப்படும் நிலங்களுக்கு, சுயசான்று முறையில் கட்டட அனுமதி கிடைக்காது' என, வீட்டுவசதி துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதில், 2,500 சதுரடி மனையில், 3,500 சதுரடி வரையிலான குடியிருப்புகள் கட்ட, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
கடந்த, 2024 ஜூலையில் இத்திட்டம் துவங்கப்பட்டது. நீர்நிலை, மலைப்பகுதி போன்ற இடங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என, அறிவிக்கப்பட்டது.
நில உரிமை, கட்டட அமைப்பு தொடர்பான அடிப்படை ஆவணங்களை தாக்கல் செய்தால் போதும்; கட்டணம் செலுத்தியவுடன் கட்டட அனுமதி ஆணை கிடைத்து விடும் என்பதால், மக்கள் ஆர்வத்துடன் இதில் விண்ணப்பிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, சுயசான்று முறையில் விண்ணப்பித்தால், 'சம்பந்தப்பட்ட நிலம் விமான நிலையம் அருகில் வருகிறது. இதற்கு தடையின்மை சான்றிதழ் வேண்டும்' என தகவல் வருவதாக கூறப்படுகிறது .
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுயசான்று முறை திட்டத்தில் தாக்கலாகும் விண்ணப்பங்களில், அதிகாரிகள் எந்த நிலையிலும் தலையிட முடியாது. கட்டட அனுமதி வழங்கிய பின்னர், தேவை இருந்தால், சில விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யலாம்.
தடையின்மை சான்று தேவைப்படாத பகுதிகளுக்கு மட்டுமே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். ஆனால், பிற அரசு துறைகளின் தடையின்மை சான்றிதழ் தேவைப்படும் பகுதிகளின் சர்வே எண்கள், இதில் இணைக்கப் பட்டுள்ளன.
எனவே, நிலத்துக்கு தடையின்மை சான்று தே வைப்பட்டால், இதில் ஒப்புதல் கிடைக்காது. அந்த விண்ணப்பங்கள் தானாக ஒற்றை சாளர முறைக்கு மாறிவிடும்.
இத்தகவல் தெரியாமல், சுயசான்று முறை திட்டத்தில், தடையின்மை சான்று கேட்கப்படுவதாக, மக்கள் தவறாக நினைத்துக் கொள்கின்றனர்.
சுயசான்று முறையில் கட்டட அனுமதி கோரும்போது, அந்த நிலத்துக்கு தடையின்மை சான்று தேவைப்படுமா என்பதை, பொது மக்கள் தான் விசாரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
