ரேஷன் அரிசி கடத்தல் பிரச்னை இனி வராது: அமைச்சர் உறுதி
ரேஷன் அரிசி கடத்தல் பிரச்னை இனி வராது: அமைச்சர் உறுதி
ADDED : மே 27, 2026 07:12 AM

சென்னை: ''ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, சோதனைகள் நடக்கின்றன. இனி வரும் காலங்களில், அந்த பிரச்னை வராது,'' என, உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில், நேற்று அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு மாவட்டம், தொகுதி வாரியாக வழங்க வேண்டிய, புதிய ரேஷன் கார்டுகள் கணக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள் புதிய கார்டு வழங்கப்படும். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, சோதனைகள் நடக்கின்றன. இனி வரும் காலங்களில் அந்த பிரச்னை வராது. வராத அளவிற்கு, கவனம் செலுத்தி, துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் துவரம் பருப்பு கொள்முதலுக்கான, 'டெண்டரில்' யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எந்தெந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பதை, 'ஆன்லைனில்' பார்க்க முடியும். விலைப்புள்ளி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெற்றிருக்கும்.
'டெண்டர்' நிபந்தனைகளை, பூர்த்தி செய்யும் தகுதி உள்ள நிறுவனங்களால்தான், டெண்டரில் பங்கேற்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
