ADDED : ஜூன் 07, 2025 11:18 PM
சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாசும், ஆடிட்டர் குருமூர்த்தியும் சென்னையில் சந்தித்து பேசினர்.
பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 5ம் தேதி, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை, ஆடிட்டர் குருமூர்த்தியும், முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் சந்தித்து மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் சென்னை வந்த ராமதாஸ், ''குருமூர்த்தி நீண்ட கால நண்பர்; மிகப்பெரிய அறிவாளி. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்,'' என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, நேற்றிரவு தி.நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்லத்தில் ராமதாசும், குருமூர்த்தியும் சந்தித்து பேசினர். மூன்று நாட்கள் இடைவெளியில், இருமுறை இருவரும் சந்தித்திருப்பது, பா.ம.க.,வில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இது தொடர்பாக பேட்டியளித்த ராமதாசிடம், 'இரண்டாவது முறையாக குருமூர்த்தியை சந்தித்தது உண்மைதானா' என்று கேட்டபோது, ''இது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் விளக்கம் அளிக்கிறேன். மதுரை வரும் அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இல்லை,'' என்றார்.