கழுதைகளைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா: கேட்கிறார் கமல்!
கழுதைகளைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா: கேட்கிறார் கமல்!
ADDED : செப் 03, 2025 10:29 AM

சென்னை: ''தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்'' என, தெரு நாய் பிரச்னைக்கான தீர்வு குறித்து கமல் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களை ராஜ்யசபா எம்பி கமல் சந்தித்தார். அதன் விபரம் பின்வருமாறு:
நிருபர்: முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து பாஜவினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்?
கமல் பதில்: ஒருத்தர் நல்லது செய்யும் போது எந்த கட்சி என்று நான் பார்ப்பது இல்லை. நாட்டுக்கு நல்லது நடக்கிறது என்றால், அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நிருபர்: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கமல் பதில்: அது பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறேன்.
நிருபர்: பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் பிரதமரின் தாயை அவமதித்துள்ளனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
கமல் பதில்: யாரையும் அவமானம் படுத்தும் வகையில் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஓட்டு காணாமல் போனது, பெயர் காணாமல் போனது எல்லாம் நான் ரொம்ப நாளாக சொல்லி கொண்டு இருக்கிறேன்.
என்னுடைய பெயரே காணாமல் போய் இருக்கிறது. போய் சொல்லி சரி செய்து கொள்வது எல்லாம் சின்ன விஷயம் தான்.
நிருபர்: தமிழகத்தில் தெருநாய் பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு என்ன தீர்வு?
கமல் பதில்: தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். கழுதை எங்கையாவது காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா? கழுதைகள் காணாமல் போய்விட்டதா? நமக்காக எவ்வளவு பொதி சுமந்து இருக்கிறது.
கழுதையை இப்பொழுது பார்ப்பதே இல்லையே. கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா? எல்லா உயிரினங்களையும் முடிந்த அளவுக்கு காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்ற வேண்டும். அது தான் என்னுடைய கருத்து.