கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு? மத்திய அரசிடம் கேட்கிறது ஐகோர்ட்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு? மத்திய அரசிடம் கேட்கிறது ஐகோர்ட்
ADDED : மே 23, 2025 12:54 AM
சென்னை:'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
இட ஒதுக்கீடு
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2025- - 2026ம் ஆண்டுக்கு, தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத சேர்க்கை, இதுவரை துவங்கவில்லை எனக்கூறி, கோவையை சேர்ந்த வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதாடியதாவது:
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில், 60 சதவீதம் தொகையை மத்திய அரசும், 40 சதவீதம் தொகையை, மாநில அரசும் வழங்க வேண்டும்.
கடந்த, 2021 முதல் 2023ம் கல்வியாண்டு வரை, மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. நுாறு சதவீதம் தொகையை, மாநில அரசுதான் வழங்கியது.
மாணவர்களின் கல்வி விஷயத்தில், மாநில அரசு அக்கறை கொண்டு உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால், என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க, வரும் 28ம் தேதி கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, 'மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், 'அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சில காரணங்களால், தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை' என்றார்.
குற்றச்சாட்டு
அப்போது, 'என்ன காரணத்துக்காக தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை' என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, 'மத்தியில் ஆளுங்கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி., கூட இல்லை என்பதால், நிதி ஒதுக்கவில்லை' என, தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விபரங்களை, மத்திய அரசு சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்று தள்ளிவைத்தனர்.