ADDED : ஜூன் 08, 2026 07:00 AM

மதுரை விமான நிலையத்தில் நிர்மல்குமார் கூறியதாவது:
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து, தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அத்திட்டத்திற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படுகிறது.
அதன் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்திய கூறுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் மீட்டர்களில் பயன் படுத்தப்படும், மோடம் மற்றும் சிம் கார்டு தொழில்நுட்பம், சிக்னல் வசதி குறைவாக உள்ள இடங்களில் சரியாக செயல்படுமா என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி முதல் கட்டமாக அரசு கட்டடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது.
சென்னை தி.நகரில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட் மீட்டர்களின் செயல் திறன் மற்றும் பிழை விகிதங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
தொழில் நுட்ப மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அமைப்புகள் நீண்ட காலத்திற்கு பயன்படுமா என்பதையும் அரசு ஆய்வு செய்து வருகிறது.
பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து வெளியான சில செய்திகள் தவறானவை.
அரசு தற்போது ஆய்வு மற்றும் மதிப்பீட்டு பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. இறுதி முடிவு முதல்வரின் ஒப்புதலுடன் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
