நவாஸ்கனி எம்.பி., மீது புகார்; சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு
நவாஸ்கனி எம்.பி., மீது புகார்; சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு
ADDED : செப் 12, 2025 07:41 AM

சென்னை; ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில், 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி.
கடந்த 2019 லோக்சபா தேர்தல் வேட்பு மனுவில், மனைவி, மகனுக்கு, 19.71 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்தாண்டு தேர்தல் வேட்பு மனுவில், 40.62 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக, 23.58 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளார். இது சம்பந்தமாக புகார் அளித்தும், சி.பி.ஐ., எந்த விசாரணையும் நடத்தவில்லை. எனவே, புகார் மீது விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு சி.பி.ஐ., ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது; விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து உள்ளது.