வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்து மீட்டது அமலாக்கத்துறை
வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்து மீட்டது அமலாக்கத்துறை
ADDED : செப் 15, 2025 07:31 PM

சென்னை: வங்கி மோசடியில் சிக்கிய, சென்னையைச் சேர்ந்த நாதெல்லா சம்பத் நகைக்கடைக்கு சொந்தமான ரூ.163 கோடி மதிப்புள்ள 27 அசையா சொத்துகளை அமலாக்கத்துறையினர் மீட்டு எஸ்பிஐ வங்கியிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த நாதெல்லா சம்பத் நகைக்கடை எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் போலியாக ஆவணங்களை கொடுத்து கடன் வாங்கி மோசடி செய்ததாக கடந்த 2018 ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். துவக்கத்தில் ரூ.250 கோடி எனக்கூறப்பட்டாலும், விசாரணை முடிவில் அந்த நிறுவனம் செய்த மோசடி ரூ.380 கோடி என சிபிஐ பதிவு செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் 2002ம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாதெல்லா சம்பத் நகைக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.163 கோடி மதிப்புள்ள 27 அசையாச் சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீட்டனர். அதனை, எஸ்பிஐ வங்கியிடம் ஒப்படைத்தனர். கடந்த 12ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.