மது கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெற தானியங்கி இயந்திரம்
மது கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெற தானியங்கி இயந்திரம்
ADDED : ஜூன் 13, 2026 02:23 AM

சென்னை: மது கடைகளில், காலி பாட்டிலை திரும்பப் பெற, தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்த, 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்து உள்ளது.
தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. சிலர் மதுவை அருந்தி விட்டு, காலி பாட்டிலை, சாலை மற்றும் மலை பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இதனால், விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதுடன், மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காலி பாட்டில்களை, மது கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தை, டாஸ்மாக் செயல்படுத்தி உள்ளது.
இதற்காக, மது பாட்டில் விற்கப்படும்போது, மது பிரியர்களிடம் இருந்து, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையுடன், 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அவர்கள் கடைகளில், காலி பாட்டிலை திரும்ப கொடுத்ததும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது.
இதனால், அதிக பணிச்சுமை ஏற்படுவதாகவும், கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க, மது பிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி, மது கடைகளில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பணியாளர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, காலி பாட்டிலை திரும்பப் பெற, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய, தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது.
செயல்படுவது எப்படி? 1 தானியங்கி இயந்திரத்தில், காலி பாட்டிலை போடுவதற்கு, முதலில் இயந்திரத்தின் மேல் பகுதியில், மது பிரியர்களின், மொபைல் போனில் உள்ள, டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான, யு.பி.ஐ., செயலியின், 'கியூ ஆர்' கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்
2 இல்லையெனில் மொபைல் போன் எண்ணை பதிவிட வேண்டும். பின், காலி மது பாட்டிலில் ஒட்டப்பட்டு இருக்கும், 'கியூ ஆர் கோடை' இயந்திரத்தில், 'ஸ்கேன்' செய்ய வேண்டும்
3 இயந்திரத்தில் இருந்து வெளியே வரும், 'டிரேயில்' பாட்டிலை வைக்க வேண்டும். பின், ஸ்கேன் செய்த யு.பி.ஐ., கணக்கிற்கு, காலி பாட்டிலுக்கான தொகை தானாகவே செலுத்தப்படும்.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு தானியங்கி இயந்திரத்தில், 3,000 பாட்டில்களை பெற முடியும்.
'இது, சோதனை ரீதியாக இரண்டு - மூன்று கடைகளில் வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அனைத்து மது கடைகளிலும் வைக்கப்படும்' என்றார்.
